சீசன் ஸ்டார்ட்.. குற்றாலம் போறீங்களா? அருவி மட்டுமில்ல.. பக்கத்துலயே நிறைய அழகான இடங்கள் இருக்கு
தென்காசி: குற்றாலம் அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி இருக்கும் நிலையில், குற்றலாலத்துக்கு அருகிலேயே இருக்கும் வேறு சில சுற்றுலா தலங்களை பற்றி பார்ப்போம்.
ஜூன் மாதத்தின் 2 ஆம் பாதி வந்துவிட்டாலே தமிழ்நாட்டில் பயண விரும்பிகளுக்கு குற்றாலம் பற்றிய நினைப்பு வந்துவிடும். கோடை வெயிலில் காய்ந்துபோன நாம், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் இருந்து ஜில் ஜில் என கொட்டும் நீரில் குளித்து குதூகளிக்கலாம்.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வந்துவிட்டால் குற்றாலம் களைகட்டத் தொடங்கிவிடும். கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியவுடன் குற்றாலம் அருவிகளில் சீசன் தொடங்கிவிடும். தற்போது குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகின்றனர்.
அதே நேரம் குற்றாலம் செல்வோர், அருவிகளில் மட்டும் குளித்துவிட்டு ஊருக்கு திரும்பிவிடுகின்றனர். ஓரிரண்டு நாட்கள் விடுமுறையில் வருபவர்கள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள் விடுமுறை கிடைத்தும் விபரம் தெரியாமல் குற்றாலம் அருவியில் குளிப்பதற்காக மட்டுமே வந்து செல்கிறார்கள் சுற்றுலா பயணிகள். அவர்களுக்கு வழிகாட்டவே இந்த பதிவு.

பாபநாசம் அணை: குற்றலாத்தில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாபநாசம் அணை உங்கள் கண்களை நிச்சயம் குளிர்ச்சியூட்டும் சுற்றுலா தலமாகும். 143 அடியில் 5500 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் ராட்சத அணையான பாபநாசம் உங்கள் கண்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும். 1942 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான இந்த அணை வரலாற்று சிறப்புகளை சுமந்து நிற்கிறது.

காரையாறு படகு சவாரி: இதுவும் குற்றாலத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. அணையில் தேங்கி நிற்கும் நீரில் நீங்கள் படகு சவாரி செய்து மகிழலாம். இதனை அனுபவிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.

புலிகள் காப்பகம்: காரையாறு அணைக்கு அருகிலேயே களக்காடு முண்டத்துறை புலிகள் காப்பகம் உள்ளது. இதன் அருகே அமைந்து இருக்கும் அகஸ்தியர் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். அருவிக்கு செல்லும் வழியில் ஏராளமான்ப புலிகளும் சிறுத்தைகளும் நடமாடுவதாக சொல்கிறார்கள். ஏராளமான விலங்குகள் இங்கு நீங்கள் கண்டு ரசிக்கலாம். மிகுந்த கவனத்துடன் இப்பகுதிக்கு செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்துகிறது.

மணிமுத்தாறு: குற்றாலத்தில் இருந்து 51 கிமீ தொலைவில் உள்ள மணிமுத்தாறு அருவியை பலரும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், சென்றிருக்க வாய்ப்புகள் குறைவு. மலை உச்சியில் இருந்து கொட்டு நீர் நதியாக உருவெடுத்து மணிமுத்தாறு அணையில் தேங்கும் அழகிய காட்சியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

பாம்பு பூங்கா: இயற்கையோடு இசைந்து பயணம் செல்லும் நீங்கள், அதன் ஒரு பகுதியான பாம்புகளை பார்க்காமல்போனால் எப்படி? குற்றாலத்தின் ஐந்தருவிக்கு அருகிலேயே பாம்பு பூங்கா உள்ளது. இங்கு பல வகையான பாம்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகிலேயே உள்ள சிறுவர் பூங்கா, மீன் பண்ணைகளுக்கு சென்று மகிழலாம்.

மலைகளுக்கு நடுவே ஒரு பூங்கா: குற்றாலத்தின் 5 அருவிகளுக்கும் மேலே மலைகள் இரண்டுக்கு நடுவே சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது சுற்றுச்சூழல் பூங்கா. பூக்களும், அதன் மீது அமரும் ஏராளமான வண்ணத்துப் பூச்சிகளையும் நீங்கள் காணலாம். இங்கிருந்து பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், குற்றாலத்தின் அழகையும் ஒரு சேர ரசிக்க முடியும். அமைதியான சூழல், சுகமான காற்றோட்டம் என அனைத்து வயதினரும் இந்த பூங்காவில் நிச்சயம் மகிழலாம்.
இவை அல்லாமல் குண்டாறு அணை, படகு குழாம் போன்றவையும் மக்களால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலா தளங்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications