கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறைய இட்லி, சாம்பார் காரணம்.. பாஜக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
கோவா: கோவாவில் உள்ள கடற்கரையில் பெங்களூரைச் சேர்ந்த வியாபரிகள் சிலர் வடை பாவ் பரிமாறுகிறார்கள். சிலர் இட்லி, சாம்பார் விற்கிறார்கள். அதனால்தான் கோவாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இட்லி, சாம்பார் விற்கப்படுவதால் கோவாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ குற்றம்சாட்டியிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா நகரம் என்றால் அது கோவா தான்.. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிற்கு இடையில் அரபிக் கடலில் அமைந்துள்ள சுற்றுலா நகரத்திற்கு தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு புதுச்சேரி எப்படியோ, அதுபோல் மொத்த இந்தியாவிற்கு கோவா தான் உற்சாகம் தரும் நகரமாக இருக்கிறது. கோவா வெறும் கடற்கரைகள் மட்டும்கொண்ட நகரம் அல்ல.. ஏராளமான சுற்றுலா விடுதிகள். கேளிக்கை விடுதிகள், கேளிக்கை அரங்கங்கள், மதுபானக்கூடங்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. இதேபோல் கோவா அருகே மலைப்பகுதிகளும் உள்ளன..

கோவாவில் உள்ள அற்புதமான கடற்கரைகள் மற்றும் கவர்ச்சியான ரிசார்ட்டுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். அஞ்சுனா கடற்கரை, கலங்குட் கடற்கரை, பாகா கடற்கரை, கண்டோலிம் கடற்கரை மற்றும் பலோலெம் கடற்கரை போன்றவை மிகவும் பிரபலம். நீச்சல், சூரிய குளியல், மீன்பிடித்தல், விண்ட்சர்ஃபிங், வாட்டர் ஸ்கீயிங் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற பல்வேறு செயல்பாடுகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது. கோவாவில் பசுமையான காடுகள் மற்றும் ஆறுகள் இயற்கை அழகால் நிறைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள சில சிறந்த வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவா குறித்து தவறான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. கால் டாக்ஸி டிரைவர் பிரச்சனை தொடங்கி, சுற்றுலா விடுதிகள் வரை பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதேபோல் கோவாவில் சுற்றுலா பயணிகள் வருகையும் பெருமளவு குறைந்துவிட்டதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவாவில் கணிசமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் கோவா கடற்கரை குடில்களில் இயங்கிவரும் ஹோட்டல்களில் இட்லி, சாம்பார் விற்பனை செய்வதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ குற்றம் சாட்டியிருக்கிறார் வடக்கு கோவாவின் கலங்குட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் லோபோ கூறும் போது, "கோவாவுக்கு வெளிநாட்டினர் வருகை குறைந்திருப்பதற்கு அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது. இதற்கு இங்கு தொழில் செய்பவர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். கோவா மக்கள் கடற்கரையில் உள்ள அவர்களுடைய குடில்களை பிற இடங்களில் இருந்துவரும் தொழிலதிபர்களுக்கு வாடகைக்கு விடுவது வருத்தம் அளிக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்த சில வியாபரிகள் வடை பாவ் பரிமாறுகிறார்கள். சிலர் இட்லி, சாம்பார் விற்கிறார்கள். அதனால்தான் கோவாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருக்கிறது. கோவையில் வடக்கு, தெற்கு என எல்லா பகுதிகளிலும் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
அதேநேரம் கோவாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல. கடற்கரையில் தொழில் செய்பவர்களும் பொறுப்பேற்க வேண்டும். போர் நடந்து வருவதன் காரணமாக ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வருவதை நிறுத்திவிட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் சில வெளிநாட்டினர் கோவாவுக்கு வருகிறார்கள். அதேசமயம், இங்குள்ள இளம் வெளிநாட்டு பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இதற்காக மாநில சுற்றுலாத் துறையும், தொழிலதிபர்களும் ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தலாம். அந்த கூட்டத்தில் கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை எதனால் குறைந்துள்ளது என்ற காரணங்களை ஆராய வேண்டும்.

தனியார் டாக்சி நிறுவனங்களுக்கும், உள்ளூர் டாக்சி ஓட்டுநர்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். இதற்காக நாம் ஒரு அமைப்பை ஏற்படுத்தவில்லை என்றால் கோவா சுற்றுலா துறையில் இருண்ட நாட்கள் வர வாய்ப்பு உள்ளது" என்று மைக்கேல் லோபோ எச்சரித்தார். இதனிடையே தென்னிந்தியாவின் பிரபல உணவான இட்லி, சாம்பாரால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ கூறியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications