ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான சுற்றுலா தலங்களுக்கும், சென்னைக்கும் பட்ஜெட்டில் இருக்கு குட்நியூஸ்
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய மத்திய பட்ஜெட்டில் சுற்றுலா துறைக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இதன்படி மாநிலங்களுடன் இணைந்து சிறந்த நாட்டின் 50 சுற்றுலா தளங்களை மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஹோம்ஸ்டேகளுக்கு முத்ரா கடன்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தள்ளார். மேலும் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பயணத்தை எளிதாக்குவது, முக்கிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவத ஆகிய திட்டங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அத்துடன் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி உதவி மற்றும் தங்குமிடங்களுக்கும் முத்ரா கடன்கள் வழங்குவது சுற்றுலா துறை சேவைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா குழுக்களுக்கான விசா தள்ளுபடி:
அதிக சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் நடவடிக்கையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா குழுக்களுக்கு விசா தள்ளுபடிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது . இந்த முயற்சி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும் இந்தியாவை சர்வதேச பயணிகள் மிகவும் விரும்பி வரக்கூடிய இடமாகவும் மற்றும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார மற்றும் இயற்கை பராம்பரிய இடங்களுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விசா மூலம் பயணத்தை எளிதாக்குவதன் மூலம், சுற்றுலா வருவாயை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
50 முக்கிய சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு
நாடு முழுவதும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க மத்திய அரசு மாநில மாநிலங்களுடன் இணைந்து செயல்பட போகிறது. இந்த முயற்சியின் காரணமாக டாப் 50 சுற்றுலா தலங்களில் உள்கட்டமைப்பு, வசதிகள் மற்றும் அணுகலை மேம்படுத்துவோம் எஎன அரசு தெரிவித்துள்ளது. அதன் மூலம் அந்த சுற்றுலா தலங்கள் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 50 சுற்றுலா தலங்களில் நிச்சயம், ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, ராமேஸ்வரம், மகாபலிபுரம், கன்னியாகுமரி போன்ற இடங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்றுலாத் திறனுடன் ஒத்துப்போகும் வகையில், புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய இடங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பீகாரில் உள்ள மிதிலாஞ்சல் பகுதியில் 50,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மேற்கு கோசி கால்வாய்க்கு நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோம்ஸ்டேக்களுக்கு முத்ரா கடன்கள்
சுற்றுலா துறைகளை மேம்படுத்த, முத்ரா கடன்கள் ஹோம்ஸ்டே வணிகங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிதி உதவி சிறு மற்றும் உள்ளூர் தங்குமிடங்கள் தங்கள் வசதிகளை மேம்படுத்த உதவும். ஊட்டி, கொடைக்கானல் மாதிரியான சுற்றுலா தலங்களில் ஹோம்ஸ்டே நடத்துவோர், லாட்ஜ் நடத்துவோர் கடன் பெற்று தங்கள் தொழிலை மேம்படுத்த முடியும். இந்த முயற்சி காரணமாக சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை தாண்டி, அவர்கள் தங்க போகும் இடமும் நிச்சயம் புதிய அனுபவத்தை வழங்கும். சுற்றுலாத் துறையில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் அரசு முடிவு செய்துள்ளத. இதன் மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துதல்
'ஹீல் இன் இந்தியா' முயற்சியின் கீழ், மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவான விலையில் அதேநேரம் உயர்தர சுகாதாரப் பராமரிப்புக்கு இந்தியா ஒரு விருப்பமான இடமாக இருக்கிறது. பொதுவாக மருத்துவ சுற்றுலாவை பொருத்தவரை வெளிநாட்டில் வாழ்பவரக்ளுக்கு சென்னை தான் முதல் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் சென்னைக்கு மருத்துவ விசாவில் வருவோருக்கான பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். விசா செயல்முறையை எளிதாக்குவதன் மூலமும், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், இந்த முயற்சி இந்தியாவை மருத்துவ சிகிச்சைகளுக்கான சுற்றுலா இடமாக உலக அளவில் நிலைபெறச்செய்யும் என்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், இந்தியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், பயணத்தை எளிதாக்குவதற்கும், மருத்துவ சுற்றுலாவில் நாட்டின் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு தெளிவான தொலைநோக்கு இருப்பதை காட்டுவதாக சுற்றுலா துறையினர் கூறுகிறார்கள். விசா தள்ளுபடிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, தங்குமிட நிதியுதவி மற்றும் தனியார் நிறுவனங்களுடனான இணைந்து செயல்படுவது போன்றவை சுற்றுலா துறையில் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications