அதிரடி அரசாணை வந்தாச்சு.. நிஜத்திலும் உதயநிதிதான் ஹீரோ! அன்பால் மனதை நெகிழச் செய்த அரங்கம்!
சென்னை: மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது திராவிட மாடல் அரசு.
என்ன என்கிறீர்களா? சாதாரண செய்தி இல்லை. தமிழக விளையாட்டுத்துறையில் இதுவரை நடக்காத மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள செய்தி அது.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் - ஜுனியர் பிரிவுகளில் முதல் 3 இடங்களைப் பிடிக்கின்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊக்கத்தொகை கொஞ்ச நஞ்சம் அல்ல. சும்மார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையாக தொகையை உயர்த்தி அரசாணையை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மீது தனிக் கவனத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிதான். அவரைத் தொடர்ந்து இன்றைக்கு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வாழ்விலும் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.

குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் மாற்றுத்திறனாளி வீரர்கள் பலர் புதிய உற்சாகம் பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு உதவித்தொகைகளைப் பெற்று பதங்கங்களையும் தட்டிக் கொண்டு தாயகம் திரும்பி உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இப்போது தேசிய அளவில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் - ஜுனியர் பிரிவுகளில் முதல் 3 இடங்களைப் பிடிக்கின்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உரிய ஊக்கத்தொகையை வழங்குவதற்கான அரசாணையை வெளியிடுவதற்கான முழுக் காரணமாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.

இந்த இனிப்பான செய்தியைக் கேட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.
இது குறித்து விளையாட்டுத்துறை மட்டும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில், "தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் - ஜுனியர் பிரிவுகளில் முதல் 3 இடங்களைப் பிடிக்கின்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க நம்முடைய திராவிட மாடல் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நலச்சங்கங்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றோம்.
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி நடைபாதை அமைத்தது முதல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்துக்குத் தனி ஆணையரை அமைத்தது வரை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் நம் கழக அரசு, விளையாட்டுத்துறையிலும் மாற்றுத்திறனாளிகளின் வெற்றிக்குத் துணை நிற்கும் என்று உரையாற்றினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்றது. அதில் பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
அந்த விழாவுக்கு வருகை தந்திருந்த அம்பிகாபதி என்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை, "எனக்குத் தரவேண்டிய ஊக்கத்தொகைகளை அரசு சரியாக வழங்கி இருந்தால், இந்நேரம் நான் கோடீஸ்வரியாக மாறி இருப்பேன். ஆனால், எந்தத் தொகையும் எனக்கு முறையாகக் கிடைக்கவில்லை.

இதற்கு முன்னதாக இருந்த அரசு எங்களை எல்லாம் ஒரு விளையாட்டு வீரர்களாகப் பொருட்படுத்தியதே இல்லை. உதயநிதி அமைச்சராக வந்த பிறகுதான் எங்களுக்கும் ஒரு மரியாதை பிறந்திருக்கிறது. இந்த அரசாணை விளையாட்டுத்துறையில் மாபெரும் சாதனை" என்கிறார் கண்களை ஈரமாக்கியபடி.
இவர் உயரத்தால் வேண்டுமானால் குட்டையாக இருக்கலாம். உள்ளத்தால் பெரிய இமயம்தான் என்று சொல்லும் அளவுக்குச் சிந்தனையால் உயர்ந்து காட்சி தருகிறார் அம்பிகாபதி.

"கடந்த 15 வருடங்களாக இந்த விளையாட்டுத்துறையில் நான் இருக்கிறேன். நான் வாங்கி குவித்த பதக்கங்களின் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நூற்றுக்கணக்கான மெடல்ஸ் வாங்கி இருக்கிறேன். நூற்றுக் கணக்கான சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறேன்.
ஆனால், அதனால் என் வாழ்க்கையில் எந்தப் பயனும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை" என்கிறார் இந்தச் சாதனை சிகரம் அம்பிகாபதி.

அவர் பேசும் போது வெளிப்படுவது வெறும் வார்த்தைகள் அல்ல. வேதனை அம்புகள். ஆகவேதான் அவரது ஒவ்வொரு சொல்லும் அம்பு போல் நம் நெஞ்சைத் துளைக்கின்றது.
அதைப் போன்று ஆதித்யா கிரி என்ற மாற்றுத்திறனாளி வீரர். இவரால் நடக்க முடியாது. சக்கரநாற்காலியில்தான் முழு வாழ்க்கையும். ஆனால், முகம் முழுக்க அத்தனை உற்சாகம்.

"நான் கடந்த ஆறு வருடங்களாகத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பயிற்சி எடுத்து வருகிறேன். உண்மையாகச் சொன்னால் உதயநிதி சார் வந்த பிறகுதான் எங்களுக்கு சில உதவித்தொகைகளே கிடைக்கிறது. அதற்கு முன்னால் எங்களை யாரும் திரும்பிக்கூட பார்த்ததில்லை" என்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், இந்த அரசாணை ஒரு மைல்கல் என்கிறார். "இனிமேல் ஜூனியர்- சீரியர் பிரிவில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையான ஊக்கத்தொகை முறையாக வீரர்களுக்குக் கிடைக்கும். இந்த அரசாணை அதை உறுதி செய்துள்ளது" என்கிறார்.

இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அத்தனை வீரர்களுக்கும் உரியக் கவுரம் அளிக்கும்படி தன் கையால் சால்வைகளை அணிவித்து மரியாதை செய்ததுடன் அவர்களுடன் ஒரு பார்வையாளரைப் போல உட்கார்ந்து விழாவைக் கண்டு ரசித்தார்.
தடகள வீரர் மாரியப்பன், "நான் என் கேரியரை 2011இல் தொடங்கினேன். அப்போது எல்லாம் இதைப் போன்ற சலுகைகள் எதுவும் இல்லை. இன்று அந்த நிலைமை மாறி இருக்கிறது. பல வீரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது" என்கிறார்

இவரைத் தொடர்ந்த மூத்த வீரர் ஒருவர், "நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக எங்களுக்குக் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த உரிமை இது. இன்றைக்கு மாற்றுத்திறனாளி வீரர்கள் வாழ்க்கையில் மகத்தான பொன்னாள்.
உதயநிதி திரையில் மட்டும் ஹீரோ கிடையாது. எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் மனதில் என்றைக்கும் ஹீரோ இவர்தான்" என்கிறார்.

மாற்றுத்திறனாளி வீராங்கனை கீர்த்திகாவின் தாயார் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவர், "எனக்கு 52 வயது ஆகிவிட்டது. என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் இன்றைக்குத்தான் நான் மிகமிக சந்தோசமாக இருக்கிறேன். பல முறை என் மகள் மெடல் வெல்லும் போது மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அதை எல்லாம்விட இன்றுதான் எனக்குச் சிறப்பான நாள்" என்கிறார்.
இந்தத் தாயின் குரல் மிகை அல்ல. அவர் அடிமனதிலிருந்து அப்படியே பேசுகிறார். அதை அவரது ஈரமான இமைகள் நமக்குச் சொல்கின்றன.














Click it and Unblock the Notifications