கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் பலி எண்ணிக்கை குறையலையே - 4002 பேர் மரணம்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 4002 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 84,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 70 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா தொற்று குறைந்தாலும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 4002 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த ஒரு மாதகாலமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,21,311 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின் படி நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,80,690 பேராக குறைந்துள்ளது.
கொரோனா வேக்சின் டோஸ்களின் இடைவெளியை அதிகரிப்பது.. ஆபத்தை ஏற்படுத்தும்.. எச்சரிக்கும்
70 நாட்களுக்குப் பின் பாதிப்பு குறைவு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 84,332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,93,59,155 பேராக அதிகரித்துள்ளது.
1,21,311 குணமடைந்தனர்
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,21,311 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,79,11,384 பேராக உயர்ந்துள்ளது.
10,80,690 பேர் சிகிச்சை
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10,80,690 பேராக குறைந்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
3,67,081 பேர் மரணம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,67,081 பேராக அதிகரித்துள்ளது.
பேருக்கு தடுப்பூசி
நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை 24,96,00,304 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனமும் விழிப்புணர்வும் தேவை
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுதான் குறைந்துள்ளது. அதற்கு முன்பாக தமிழகம், புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கேரளாவில் வார இறுதி நாட்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைவோர் எண்ணிக்கை தினசரியும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் வீட்டிற்குள் இருந்தால் மட்டுமே நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.