"பாஜகவின் மனுநீதி முகம்..: அடியாள் துறையாக மாறும் அமலாக்கத்துறை.." கொந்தளித்த சீமான்.. என்ன நடந்தது
சென்னை: விவசாயிகளுக்குச் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில் நாம் தமிழர் சீமான் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய விவசாயிகளுக்குச் சாதிப் பெயர்களுடன் சம்மன் அனுப்பப்பட்ட சம்பவம் பேசுபொருளானது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சாதிப் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியது தவறானது என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சீமான்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அமலாக்கத் துறை நடவடிக்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு அவர்களின் சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
மனுநீதி முகம்: தமிழ்நாட்டின் பழந்தமிழ் தொல்குடிகளில் ஒன்றான தேவேந்திரகுல வேளாளர்களின் குடிப்பெயரினை நாங்கள்தான் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டோம் என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பேசி வந்த நிலையில், தற்போது அதே அரசின் கீழ் இயங்கும் அமலாக்கத்துறையே அம்மக்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் சாதிப் பெயரினை குறிப்பிட்டு அழைப்பாணை அனுப்பியுள்ளது, பாஜகவின் மனுநீதி முகத்தையே காட்டுகிறது.
இந்திய அரசியலைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், குற்ற புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட தன்னாட்சி சட்ட அமைப்புகளை தங்களின் கைப்பாவையாக மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, ஆத்தூர் விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மிரட்டி வாங்க முற்படும் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரனின் தூண்டுதலின் பேரில் வேளாண் பெருங்குடி மக்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ள கொடும் நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது.
கடும் தாக்கு: தற்போது மேலும் ஒருபடி முன்னேறி ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது வெட்கக்கேடானது. தமக்குச் சொந்தமான நிலத்தில் வேளாண்மை செய்ய முடியாமல் பாஜக நிர்வாகி குணசேகரனால் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து, போதிய வருமானமின்றி அன்றாட உணவிற்கே திண்டாடிவரும் ஏழ்மையான விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது.
அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டுச் சிக்கிய நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள நிலையில் ஏழை விவசாயிகளுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதன் மூலம் அமலாக்கத்துறையில் தொடர்ச்சியாக மிகப்பெரிய ஊழல்கள் நடைபெறுவது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.

பழி வாங்கும் அமலாக்கத் துறை: எதிர்க்கட்சியினரையும், நேர்மையான ஊடகவியலாளர்களையும், பாஜகவின் பாசிச ஆட்சியை விமர்சிப்பவர்களையும், இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் பழிவாங்க அமலாக்கத்துறைக்குக் கட்டற்ற அதிகாரமும், சுதந்திரமும் மோடி அரசு கொடுத்ததன் விளைவே இந்திய அளவில் முறைகேடுகள் நிறைந்த அமைப்பாக அமலாக்கத்துறையை மாற்றியுள்ளது.
ஆகவே, சாதிய வன்மத்துடன் ஆத்தூர் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை அமலாக்கத்துறை உடனடியாகத் திரும்பப்பெறுவதுடன் அவர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இனியும் இதுபோன்று அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எளிய மக்களை மிரட்டும் கொடும் போக்கினை அமலாக்கத்துறை கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications