வெள்ளியங்கிரி டிரெக்கிங் ப்ளான் போடுவோருக்கு முன்னெச்சரிக்கை.. 2022-ல் 13 பேர் பலி- வனத்துறை அட்வைஸ்!
கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிப்பதற்காக 7 மலைகளை கடந்து செல்லும் பக்தர்கள் மரணமடையும் சம்பவம் அடுத்தடுத்து நிகழ்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்களில் 5 பேர் இந்த ஒரே மாதத்தில் உயிரிழந்திருப்பதால் வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறுவது வழக்கம். வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபடுவதற்காக பக்தர்கள் 7 மலைகளைக் கடந்து செல்வர்.

பொதுவாக வெள்ளியங்கிரி மலைகளில் காலநிலை சீராக இருப்பது இல்லை. ஒவ்வொரு மலையிலும் சீரற்ற காலநிலை இருக்கும். அதிக வெயில், கடும் குளிர் என மாறி மாறி காலநிலை இருப்பதால் வெள்ளியங்கிரி மலை ஏற கோடை காலங்களில் மட்டும் வனத்துறை அனுமதித்து வருகின்றனர். இதனால் தற்போது வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவை சேர்ந்த டாக்டர் சுப்பாராவ், சேலம் ஜலகண்டபுரம் தியாகராஜன், தேனி சீப்பாலக் கோட்டை பாண்டியன் ஆகியோர் கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள். இவர்களில் சுப்பாராவ், தியாகராஜன் மலையேறிவிட்டு திரும்பும் வழியில் மரணமடைந்தனர். பாண்டியன் மலையேறும் போதே மரணித்துவிட்டார்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில் வெள்ளியங்கிரி மலையேறி வழிபாடு நடத்துகிற பக்தர்கள் உயிரிழப்பது என்பது ஆண்டுதோறும் நிகழ்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் மொத்தம் 8 பக்தர்கள் மரணமடைந்தனர். அதற்கு முந்தைய 2022-ம் ஆண்டு வெள்ளியங்கிரி மலையேறியவர்களில் 13 பேர் உயிரிழந்தனர். இணை நோய் உள்ளவர்கள் இத்தகைய மலையேற்றங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் எப்போதும் குழுவாகவும் உரிய அவசரகால மருந்துகளுடனும் செல்வதும் சரியானதாக இருக்கும் என அறிவுறுத்தல் விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications