நூற்பாலை இயந்திரத்தில் கையை விட்ட 4 வயது சிறுவன்.. பறி போன 4 விரல்கள்.. ஆட்சியரிடம் மனு
Recommended Video
கும்பகோணம்: நூற்பாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் கைவிட்டதில், 4 விரல்கள் துண்டான 4 வயது சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி அவரது பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
கும்பகோணம் பகுதியை சேர்ந்த முருகேசன்- ஹேமா தம்பதி. இவர்கள் கோவை சோமனூர் பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் தங்கி பணியாற்றி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி இவர்களது 4 வயது மகன், ரித்தீஷ் பாண்டி, மில்லில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இயந்திரத்தில் கையை விட்டதில் பலத்த காயம் எற்பட்டது. இதையடுத்து மில் நிர்வாகத்தினர் சிறுவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கைவிரிப்பு
அங்கு சிகிச்சை தாமதமான நிலையில் சிறுவனின் இடது கையில் இருந்த 4 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் ரூபாயை பெற்றோரிடம் முன்பணமாக கொடுத்த மில் நிர்வாகம் அதன் பின்னர் பணம் கொடுக்க முடியாது என கைவிரித்து விட்டதாக தெரிகிறது.

கோவை ஆட்சியர்
இதனால் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தனர்.

கண்ணீர் மல்க மனு
கையில் உள்ள பொருட்களை அடகு வைத்து கூலித்தொழிலாளிகளான தாங்கள் தற்போது வரை சிகிச்சை அளித்து வருவதாகவும் உரிய சிகிச்சை கிடைத்தால் தங்கள் மகனின் கையையும் வருங்காலத்தையும் காப்பாற்ற முடியும் என பெற்றோர் அப்போது கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மில் மீது நடவடிக்கை
சிறுவனுடன் வந்த பெற்றோரை கண்டு அனுதாபம் அடைந்த பொதுமக்கள் உரிய பாதுகாப்பின்றி குழந்தைகள் விளையாடும் அளவிற்கு கவனக்குறைவாக செயல்பட்ட மில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications