ஊட்டி போறீங்களா.. மசினகுடியில்தான் காத்திருக்குது ட்விஸ்ட்! திண்டாடும் சுற்றுலா பயணிகள்! என்னாச்சு
நீலகிரி: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அழகிய இடங்களில் ஒன்றாக மசினகுடி உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் இந்த ரூட் வழியாகவே ஊட்டிக்கு வருகின்றன. இதனால் மசினகுடி சோதனை சாவடியில் இ பாஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மசினகுடி சாலையில் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கும் நிலை உள்ளது.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது ஊட்டி. கடல் மட்டத்தில் இருந்து 7,347 அடி உயரத்தில் உள்ள ஊட்டி மிகச்சிறந்த கோடைவாஸஸ்தலமாக உள்ளது. இங்கு நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கோடை காலத்தில் ஊட்டிக்கு அலை மோதுவதை பார்க்க முடியும்.

இதனால், ஊட்டியில் கட்டுக்கடங்காமல் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல் வருகிற ஜூன் 30 ஆம் தேதி வரை வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதியில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே இ-பாஸ் பெற்று வர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது.
இதன்படி தற்போது இ பாஸ் வைத்து இருக்கும் வாகனங்கள் மட்டுமே ஊட்டிக்கு செல்ல அனுமதிக்கப்படுறது. ஈஸ்டர் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி சோதனைச்சாவடி வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் ஊட்டிக்கு வருகை தருவதை பார்க்க முடிகிறது.
இதனால், ஊட்டிக்கு வரும் வாகனங்கள், மசினகுடி சோதனைச்சாவடியை மறித்து நிறுத்தப்பட்டு இ-பாஸ் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், சிக்னல் கோளாறு ஆகியவற்றால் இ பாஸ் சோதனை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், வாகனங்கள் சாலையில் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விடுவதால் மசினகுடி சோனை சாவடி அருகே கடுமையான போகுவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சோதனை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத்தால் குழந்தைகளுடன் வரும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை உள்ளது. இதனால், சிக்னல் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications