கொடைக்கானல் வந்தார் ஸ்டாலின்.. குடும்பத்துடன் ஐந்து நாட்கள் தங்கப்போகும் இடம் தெரியுமா?
கொடைக்கானல்: 5 நாட்கள் பயணமாக குடும்பத்தினருடன் கொடைக்கானல் வந்தடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின், மதுரையில் இறங்கி அங்கிருந்த கார் மூலம் வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் பாம்பார்புரம் நட்சத்திர விடுதிக்கு இன்று பிற்பகல் வந்தார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரையில் எல்லா மாவட்டங்களிலும் வெயில் கடுமையாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக வெப்பம் பதிவாகிறது. ஈரோட்டில் 8-வது நாளாக நேற்றும் 108 டிகிரியையொட்டி வெயில் பதிவாகி இருந்தது. சேலம், தர்மபுரி, வேலூர் உள்பட மொத்தம் 13 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் - 107.6 டிகிரி (42 செல்சியஸ்), திருப்பத்தூர் - 106.52 டிகிரி (41.4 செல்சியஸ்), தர்மபுரி - 106.16 டிகிரி (41.2 செல்சியஸ்), வேலூர் - 105.98 டிகிரி (41.1 செல்சியஸ்), திருத்தணி - 105.08 டிகிரி (40.6 செல்சியஸ்), கரூர் - 104.36 டிகிரி (40.2 செல்சியஸ்), சேலம் - 104.18 டிகிரி (40.1 செல்சியஸ்), மதுரை - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்), கோவை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), திருச்சி - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்), நாமக்கல் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகி உள்ளது.
நாளுக்கு நாள் வெப்பம் அதிகரிப்பதால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் படை எடுத்து வருகிறார்கள். இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. மக்கள் அங்கு நிலவும் குளுகுளு கால நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. ஊட்டி படகு இல்லத்திற்கு வந்தவர்கள், படகுகளில் சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். ஊட்டி ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் கண்டு ரசித்த பயணிகள், குதிரை சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். இதேபோல் பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ந்தார்கள்..
கொடைக்கானலை பொறுத்தவரை, கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்ததே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் திக்குமுக்காடி வருகிறது. தினமும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் மலைப்பாதை மற்றும் நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த காரணத்தால், தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் நேற்று நிரம்பின. தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.
திங்கள்கிழமையான இன்றும் கொடைக்கானல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த சூழலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு இன்று பிற்பகல் வருகை தருகிறார். ஓய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று காலை சென்னையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்டார்..
சென்னையில் வீட்டில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் சென்றார். பின்னர், அங்கிருந்து விமானத்தில் மதுரை செல்லும் விமானத்தில் ஏறியமுதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் இறங்கி, காரில் கொடைக்கானலுக்கு இன்று பிற்பகல் வந்தார். கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் வரும் 3ம்தேதி வரை கொடைக்கானலில் தங்குகிறார். முதல்வரின் வருகையை ஒட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் வருகைக்காக விஷேசமாக எந்த கட்டுப்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் விதிக்கவில்லை. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் விதிக்கவில்லை. அதேநேரம் முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானலில் 4ம் தேதி வரை டிரோன்கள் பறக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த 2021 ல் சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொடைக்கானல் சென்று குடும்பத்துடன் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், அப்போதும் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். அதேபோல் தற்போதும் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், குடும்பத்துடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் வந்துள்ளார். இப்போதும் சென்டிமெண்டாக அதே பாம்பார்புரம் நட்சத்திர விடுதியில் தங்குவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications