மகாபிரபு நேற்று தானே வந்தீங்க.. அதுக்குள்ளயேவா.. கொடைக்கானலில் 10 கிமீக்கு ஸ்தம்பித்த வாகனங்கள்
கொடைக்கானல்: தொடர் விடுமுறையால் குவியும் சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் சாலைகளில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றன.. இது தொடர்பாக ட்ரோன் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட மிக மிக அதிகமாகி வருகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று தான் மழையுடன் குளுகுளு சீசன் தொடங்கியது. சீசன் தொடங்கிய மறுநாளே (இன்றே) சுற்றுலா பயணிகள் மொத்தமாக படை எடுக்க தொடங்கி உள்ளனர்.

கொடைக்கானல் வருவதற்கு மொத்தம் மூன்று வழிகள். இதில் பிரதான வழி என்றால் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வழியாக தேனி மாவட்டத்தின் காட்ரோடு வழியாக செல்லும் பாதை தான்.. இந்த பாதை மிகவும் அகலமாகவும், இரண்டு வாகனங்கள் சர்வ சாதாரணமாக செல்லக்கூடிய வகையில் இருக்கும்.. அடுத்ததாக பழனி வழியாக கொடைக்கானல் வரும் பாதை.. இதுவும் பெருமாள் மலையில் முடியும்.
3வதாக தேனிமாவட்டம் பெரியகுளம், கும்பக்கரை வழியாக அடுக்கம் கிராமத்திற்குள் நுழைந்து வரும் பாதை.. இந்த பாதையில் பேருந்துகள் சென்று வர முடியாது. கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தான் சென்றுவர முடியும். தற்போது பெரியகுளம் கொடைக்கானல் பாதையில் வேலைகள் நடைபெறுவதால், பயணிக்க அனுமதி உள்ளதா என்பதே தெரியவில்லை.. அதுபற்றி அறிவிப்புகளும் வெளியாகவில்லை.. மொத்தமாக எல்லா பாதையும் பெருமாள் மலையில் முடிந்துவிடும்.
பெருமாள் மலை முதல் கொடைக்கானல் பேருந்து நிலையம் வரை உள்ள 14 கிமீ தூரம் சாலை போக்குவரத்து நெரிசலில் திணறும்.. குறிப்பாக கொடைக்கானல் நகரின் நுழைவு வாயிலான வெள்ளி நீர் வீழ்ச்சி தொடங்கி பெருமாள் மலை வரை வார இறுதிகளில் அணிவகுத்து நிற்கும்.. வழக்கம் போல் இன்றும் அணிவகுத்து நின்றன.
கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த காரணத்தால், ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வந்தது.. அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறை கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.. இந்நிலையில் இரண்டு மாதங்களாக சரியான மழையும் இல்லை... இந்த சூழலில் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் அதாவது சித்திரை பிறக்க போகிறது என்றால் கோடைமழை பெய்யும், சித்திரையும், குளு, குளு சீசனும் கொடைக்கானலில் ஒன்றாக தொடங்கும்..
அதை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து 30 நிமிடம் வரை பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு விட்டுவிட்டு சாரல் மழை பெய்தபடி இருந்தது. இதனிடையே கொடைக்கானலில் நேற்று காலையில் இருந்தே குளிர்ச்சியான சூழல் நிலவியது. மதியம் 2 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. இதனால் பில்லர் ராக் மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் மேகங்கள் தவழ்ந்து சென்றது. இதன் மூலம் மழையுடன் கொடைக்கானலில் குளு, குளு சீசன் தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமையான நேற்று கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இதமான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
நேற்றுதான் கோடை சீசன் கொடைக்கானலில் தொடங்கிய நிலையில், இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் படை எடுத்துள்ளனர். பொதுவாக வார இறுதிகளில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் என்கிற நிலையில், தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.. இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி தொடங்கி பெருமாள் மலையை தாண்டி சுமார் 10 கிமீ துரத்திற்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. வெள்ளி நீர் வீழ்ச்சியில் பலர் வாகனங்களை நிறுத்துவதால் இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் சோதனை சாவடி காரணமாகவும் நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications