இந்தியாவில் "இந்த" நகரம் தான் பெஸ்ட்.. மிஸ் பண்ணாதீங்க.. வியந்துபோன வெளிநாட்டு யூடியூபர்! சபாஷ்
சண்டிகர்: இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு இளைஞர் ஒருவர், நமது நாட்டின் அழகைக் கண்டு வியந்து போனார். மேலும், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே செல்வதாகவும் நாட்டின் மற்ற பகுதிகளைச் சுற்றிப் பார்க்கத் தவறுவதாகவும் கூறுகிறார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் வேண்டும் என்றே இந்தியா பற்றி நெகட்டிவாக இணையத்தில் பகிர்கிறார்கள். அதேநேரம் இந்தியாவுக்கு வரும் பல வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் கண்டு வியந்து போகிறார்கள்.

வெளிநாட்டுப் பயணி
அப்படித் தான் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர், நமது நாட்டை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். மேலும், அவர் சண்டிகரை நாட்டின் சிறந்த மற்றும் மிகவும் நேர்த்தியான நகரங்களில் ஒன்று என புகழ்ந்து தள்ளி இருக்கிறார் . ஒரே ஆண்டில் இருமுறை இந்தியாவுக்கு வந்துள்ள போர்ட்டர், தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தனது இந்தியப் பணம் குறித்துப் பேசியுள்ளார்.
பெஸ்ட்
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா போன்ற வழக்கமான சுற்றுலாத் தலங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சண்டிகரையும் தங்கள் லிஸ்டில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டார். அங்குள்ள சுக்னா ஏரியில் படகு சவாரி செய்த அவர், "இந்தியா குறித்த சோஷியல் மீடியாவில் பார்க்கும் விஷயங்களை நம்பாதீர்கள். பலர் வேண்டும் என்றே நெகட்டிவ் விஷயங்களையே காட்டுவார்கள். ஆனால் சண்டிகர் போன்ற இடங்கள் மிகத் தூய்மையாகவும், நவீன நகரமாகவும் உள்ளன
இங்குத் தண்ணீர் கூட மிகத் தூய்மையாக இருக்கிறது. இது இந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்று. இங்கு வருபவர்களுக்குப் பெரும்பாலும் சண்டிகர் தெரியாது. அவர்கள் வழக்கமாக டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே செல்வார்கள். சண்டிகர் போன்ற இடங்களைத் தவறவிடுகிறார்கள். ஆனால், நீங்கள் அந்தத் தப்பைச் செய்யாதீர்கள்" என்றார்.
பன்முகத்தன்மை
சண்டிகரின் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் தொகையையும், அதன் திறமையான, திட்டமிட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பையும் போர்ட்டர் பாராட்டினார். அவர் மேலும், "இந்த நகரம் பஞ்சாபி மற்றும் ஹரியானா கலாச்சாரங்களின் அற்புதமான கலவையாக இருக்கிறது. இது நம்பமுடியாத அளவுக்குப் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. இங்கு உணவும் அற்புதமாக உள்ளது.. மேலும் சண்டிகர் இது இந்தியாவின் பசுமையான, தூய்மையான நகரங்களில் ஒன்றாகும்.
சண்டிகர் தான் இந்தியாவின் முதல் திட்டமிட்ட நகரங்களில் ஒன்று. அதை இங்கு வந்தால் உங்களால் உணர முடியும். இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் அதிகப் போக்குவரத்து, ஹாரன் இரைச்சல், சத்தம் போன்றவை இங்கு இல்லை" என்று பதிவிட்டிருந்தார். அவரது வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. குறுகிய காலத்தில் ஒரு லட்சம் வியூஸ்களை இது கடந்துவிட்டது.
நெட்டிசன்கள்
மேலும், நெட்டிசன்களும் இது தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர், "கிழக்கு பஞ்சாப், வடக்கு ஹரியானா, மேற்கு ஹிமாச்சல், கேரளா, வடக்கு காஷ்மீர், சிக்கிம், தெற்கு ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஐரோப்பியத் தரத்திலான சுற்றுலா அனுபவத்தை வழங்குகிறது" என்றார். பலரும் கிட்டத்தட்ட இதேபோன்ற கருத்துகளைத் தான் பதிவிட்டு வருகிறார்கள்.
சண்டிகர்
ஸ்விஸ்-பிரெஞ்சு கட்டிடக் கலைஞர் லெ கார்பூசியர் என்பவரால் 1950களில் வடிவமைக்கப்பட்ட சண்டிகர், அகலமான சாலைகள், மரங்கள் நிறைந்த பாதைகளைக் கொண்டது. மேலும், அதில் "செக்டர்கள்" எனப்படும் மினி- நகரங்கள் போன்ற நவீன உள்கட்டமைப்பும் இருக்கிறது. அங்கு சுக்னா ஏரி, ரோஸ் கார்டன், ராக் கார்டன் போன்ற பல சுற்றுலாத் தலங்களும் உள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சண்டிகரைச் சுற்றிப் பார்க்க ஏற்றவையாகும்.












Click it and Unblock the Notifications