வால்பாறைக்கு போக ஆசைப்படுறீங்களா..வனத்துறையின் எச்சரிக்கையை கேட்டுட்டு போங்க!
கோவை : கோவை மாவட்டம் வால்பாறைக்கு மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் வனத்துறை சோதனை சாவடியிலேயே சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளச்சிக்கு மேலே உள்ள வால்பாறை சிறந்த சுற்றுலா தளம் ஆகும். இங்கு தேயிலை தோட்டங்களும், அருவிகளும், அடர்ந்த காடுகளுடன் ரம்மியமான சூழலும், இதமான காலநிலையும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

அதேநேரம் வால்பாறை தமிழ்நாட்டின் மற்ற சுற்றுலா தளங்களை போல் இல்லை. வனவிலங்குள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகும். சர்வசாதாரணமாக யானைகள் வந்து போகும். யானை மட்டுமல்ல, சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகாக இருக்கும். வனவிலங்குகள் சாலைகளிலும், வால்பாறை நகர் பகுதிகளிலும் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலைப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.
இதனிடையே வால்பாறை வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணராமல் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக சாலைகளில் வாகனங்களில் வலம் வருகிறார்கள். இதனால் வனவிலங்குகள் வாகனங்களையும், அதில் வருபவர்களையும் தாக்கும் நிலை ஏற்படுகிறது. அடிக்கடி வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கும் காரணத்தால், சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மாலை ஆறு மணிக்கு மேல் தேவையின்றி சுற்றுலா பயணிகள் தங்கும் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் சாலைகளில் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
அதேபோல் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் வனத்துறை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்துகிறார்கள். ஆழியார் சோதனை சாவடிக்கு மேல் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் அவசர தேவைக்காக வரும் வால்பாறை, அட்டகட்டி, மற்றும் காடம்பாறை பகுதியில் உள்ளூர் பொதுமக்கள் மட்டும் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து செல்ல முடியும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே வால்பாறைக்கு சுற்றுலா போக முடிவு செய்துள்ளீர்கள் என்றால், மாலை 6 மணிக்கு முன்பாக ஆழியார்சோதனை சாவடிக்கு வர வேண்டும். அல்லதுகாலை 7 மணிக்கு தான் ஆழியார் சோதனை சாவடிக்கு வர வேண்டும். அப்போது தான் வனத்துறையினர் உங்களை அனுமதிப்பார்கள்.

அண்மையில் வால்பாறை அடுத்துள்ள கவர்க்கல் குடியிருப்பில் யானைகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தின. சின்னப்பன் , உஷா , கோபி , சந்திரிகா, கங்காதரன் மற்றும் சகுந்தலா ஆகியோரின் வீடுகளை இடித்து சமையல் உபகரணங்கள் மற்றும் அரிசி பருப்பு உள்ளிட்டவர்களை வெளியில் இழுத்துப் போட்டு சேதப்படுத்தியது.
மேலும் அருகே உள்ள காமாட்சி அம்மன் கோவில் வளாகத்துக்குள் சென்ற காட்டு யானைகள், உண்டியல் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தின. அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர் இரவு நேரத்தில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications