தேனியில் ஒரு “ட்ரீம் லேண்ட்”.. உடனே பார்க்கனுமா.. அப்போ மேகமலை போலாமே! என்ன ஸ்பெஷல்? எப்படி செல்வது?
சென்னை: தமிழ்நாட்டில் ஏராளமான அசத்தலாம மலை வாசஸ்தலங்கள், சுற்றுலா தளங்கள் இருந்தாலும் பலர் ஊட்டி, கொடைக்கானலுக்கும், மூணாறுக்குமே சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படி தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமடையாத சுற்றுலா தளம் பற்றிதான் பார்க்கப்போகிறோம். அதுதான் மேகமலை.
கண்ணை மூடிக்கொண்டு அழகான உலகம் என்று உங்கள் கற்பனைக்கு எட்டும் தூரம் வரை சிந்தித்தால் எந்த காட்சி கனவில் வரும். என் கண்களை மூடிக்கொண்டு நான் சிந்திக்கும்போதெல்லாம் பச்சை போர்வை போர்த்தியதை போன்ற உயர்ந்த மலைகளும், பெரிய நீர் தேக்கமும், தேயிலை தோட்டங்களும், சாரல் மழையும், உரசிச் செல்லும் மேகங்களும், மிதமான குளிரும், இசையை விட இனிமையான பறவைகள், பூச்சிகளின் சத்தமுமே நினைவுக்கு வருகிறது.

அந்த அளவுக்கு மலை வாசஸ்தளங்களின் மீதான ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஊட்டி, மூணாறு போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா சென்றபோது அங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். அந்த கற்பனை என்பது அவரவருக்கு ஏற்பட மாறுபடலாம். ஆனால், பலருக்கும் அத்தகைய சூழல் பிடித்திருக்கும். காரணம், கான்கிரீட் காடுகளுக்கு மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களை இந்த மலைகள் ஆசுவாசப்படுத்துகின்றன.
அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் மேகமலை. மூணாறுக்கும், ஊட்டிக்கும், கொடைக்கானலுக்கும் படையெடுக்கும் மக்களின் கவனம் பெறாமல் இயற்கை தன்மை நிறைந்து இருக்கிறது மேகமலை. கற்பனையாக நாம் நினைத்த பச்சை போர்வை போர்த்திய மலைகள், நீர் தேக்கங்களும், தேயிலை தோட்டங்களும் கொண்ட ரம்மியமான சுற்றுலா தலம் மேகமலை.
அழகில் ஆளை மயக்கும் இந்த மேகமலை மூணாறுடன் முத்திமிட்டுக்கொண்டு இருக்கும் தேனி மாவட்டத்தில்தான் அமைந்து உள்ளது. உங்கள் கேமரா, செல்போன் பேட்டரியை உடனே தீர்க்கும் அளவுக்கு மேகமலை திரும்பும் திசையெங்கும் அழகால் நிறைந்தது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்து இருக்கும் இந்த மேகமலை பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் உங்கள் இதயத்துக்கு இதமளிக்கும்.
இங்கேயே டெண்டு போட்டு தங்கிவிடலாமா என்று எண்ணும் அளவுக்கு உங்களை வசியம் செய்துவிடும். ஒருமுறை இங்கு வந்துவிட்டு மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் அளவுக்கு கொள்ளை அழகு. ஊட்டி, கொடைக்கானல், மூணாறை போல் சுற்றுலா பயணிகள், வாகனங்கள் அதிகம் இருக்க மாட்டார்கள், என்பதால் அதன் அழகை முழுமையாக அனுபவிக்கலாம்.
மேகமலையில் நீங்கள் கண்டுகளிக்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. மேகமலை 1, தூவானம் எனப்படும் மேகமலை 2, மணலாறு அணை, மேல்மணாறு அணை, மகாராஜா மெட்டு போன்ற பகுதிகள் உங்களை தன் அழகால் கட்டிப்போட்டுவிடும். ஏலக்காய், மிளகுத்தூள் மற்றும் இலவங்கப்பட்டை பட்டைகள் போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. குறைந்த விலையில் அவற்றை வாங்கி வரலாம்.

தமிழ்நாடு அரசால் அதிகம் பிரபலமடையாக சுற்றுலா தலம் என வகைப்படுத்தப்பட்டு இருக்கும் மேகமலையில் அரிய விலங்குகள், தாவரங்கள், யானைகள், காட்டெரிமைகள், மான்கள், புலிகள், நீலகிரி லாங்கூர், பானெட் மக்காவுகள், சோம்பல் கரடிகள், வழுவழுப்பான நீர்நாய், சாம்பல் காட்டுப் பறவைகள், முள்ளம்பன்றிகள், குரைக்கும் மான்கள் மற்றும் பறக்கும் அணில்கள் போன்றவையும் உங்கள் கண்ணில் தென்படலாம்.
மதுரை - உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனிக்கு வந்து மேகமலையை அடையலாம். தேனியில் இருந்து மேகமலைக்கு 60.6 கிலோ மீட்டர் தூரம்தான். திண்டுக்கல் - தேனி - கொட்டரக்காரா நெடுஞ்சாலை/ பெரியகுளம் - கம்பம் சாலை வழியாக ஒன்றரை மணி நேரத்தில் மேகமலையை அடைந்துவிடலாம். ஒரு வேளை கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் மேகமலையை அனுபவித்துவிடுங்கள்.












Click it and Unblock the Notifications