தஞ்சாவூரில் “டைம் டிராவல்” போலாமா.. அதென்ன பொன்னியின் செல்வன் டூர்? சோழ நாட்டை சுத்தி வரலாம் வாங்க
தஞ்சாவூர்: தமிழினத்தின் வரலாற்று பெருமையாக கூறப்படும் சோழ பேரரசுவின் வரலாற்று சிறப்புமிக்க தளங்களுக்கு நேரில் சென்று பார்க்க ஆசையாக உள்ளதா? இப்பதிவை முழுமையாக வாசியுங்கள்.
தமிழ்நாட்டின் வரலாறு என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கும் வருவது தஞ்சாவூரும் மதுரையும்தான். காரணம் சோழ பேரரசு மற்றும் பாண்டிய பேரரசின் தலைமையகங்கள் இவைதான். சோழர்களின் வரலாற்றை தழுவி புணையப்பட்ட நாவலான பொன்னியின் செல்வன் பல ஆண்டுகள் தாண்டியும் நிலைத்து நிற்கிறது.

இதனை திரைப்படமாக இயக்கி 2 பாகங்களாக வெளியிட்டு இருந்தார் மணிரத்னம். முதல் பாகம் கடந்த ஆண்டும், 2 ஆம் பாகம் இந்த ஆண்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதில் விக்ரமும், ஜெயம் ரவியும், கார்த்தியும், திரிஷாவும், ஐஸ்வர்யா ராயும் சோழர்கள், கதை மாந்தர்களாக நடித்து மக்கள் மனதில் பதிந்தனர்.
அதேபோல் அந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட இடங்களும் மக்கள் மனதில் அப்படியே பதிந்தன. தஞ்சை மண்ணின் அழகை அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள். ஆனால், அந்த திரைப்படங்களில் காட்டப்பட்டது எல்லாம் மிகவும் சொற்பம்தான். அதை விட கொள்ளை அழகை கொண்டது தஞ்சை.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்று அதன் அழகையும் பசுமையையும் வர்ணிப்பது உண்டு. பொன்னியின் செல்வன் படம் பார்த்த பிறகு தஞ்சாவூருக்கும், பெரிய கோயிலுக்கும், அதில் கூறப்பட்ட ஊர்களுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வருகையும் அதிகரித்தது.
அவர்களுக்கு வசதியாக கடந்த ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இடங்களுக்கு மக்களை அழைத்து செல்ல 3 நாள் சிறப்பு சுற்றுலா பேக்கேஜை அறிவித்தது. இதற்கென இணையதள முகவரியையும் அறிவித்தது. தற்போது அந்த இணையதளத்தில் சுற்றுலா பேக்கேஜுகள் இல்லை.
அதனால் என்ன? நாம் அந்த இடங்களுக்கு எழுத்தின் ஊடாக உங்களை அழைத்துச் செல்கிறோம். இதை வாசித்த பிறகு நீங்களாகவே அப்பகுதிக்கு சென்று வரலாம். நீங்கள் சென்னையை சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்வோம். வண்டியை எடுத்துக்கொண்டு ஈசிஆர் வழியாக பயணித்தால் முதல் நாள் மாமல்லபுரத்தில் சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்து கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு செல்ல வேண்டும்,
அதை தொடர்ந்து மேல்கடம்பூருக்கு நீங்கள் சொல்ல வேண்டும். ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படும் கடம்பூர் மாளிகை அங்குதான் உள்ளது. அப்பகுதிக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு கொள்ளிடம் ஆற்றுக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு பழுவூருக்கும், அங்கிருந்து கும்பகோணத்துக்கும் நீங்கள் செல்லலாம்.
முதல் நாளை இவ்வாறாக கழித்து கும்பகோணத்திலேயே தங்கலாம். 2 ஆம் நாள் தஞ்சாவூருக்கு புறப்படலாம். செல்லும் வழியிலேயே திருப்பரம்பியம், பழையாறை, பட்டீஸ்வரம், திருவையாறு, தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் செலவிட்டு தஞ்சையை வந்தடையலாம்.
அங்குள்ள தஞ்சை அரண்மனை, உலகையே வியக்க வைக்கும் பெரிய கோயில் என ராஜராஜ சோழனின் பிரம்மாண்டங்களை கண்டுகளிக்கலாம். தஞ்சாவூரில் சுற்றிப்பார்க்க எண்ணற்ற இடங்கள் உள்ளன. தற்போது தஞ்சை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அங்கிருந்து திருவாரூர் வழியாக ஈசிஆர் சாலையை பிடித்து கோடியக்கரைக்கு சென்றடையலாம். கடலோர பகுதியான இங்கிருந்துதான் சோழர்கள் இலங்கைக்கு சென்று வந்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்திலும் கோடியக்கரை பெயரை பலமுறை சொல்லி இருப்பார்கள்.
கோடியக்கரை புகழ்பெற்ற பறவைகள் சரணாலயமாகும். அங்கு வரும் அழகிய வெளிநாட்டு பறவைகளை கண்டுகளிக்கலாம். அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு சென்று சுற்றுவட்டார பகுதிகளை பார்வையிடலாம். நாகையை சுற்றி நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், காரைக்கால் கடற்கரை, தரங்கம்பாடி டட்சு கோட்டை, பூம்புகார் கடற்கரை என ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு சென்னையை வந்தடையலாம்.












Click it and Unblock the Notifications