கடவுளே விரும்பும் பகுதிகள்.. சென்னை பக்கத்திலேயே 5 டாப் சுற்றுலா தலங்கள்.. இந்த வீக் எண்ட் பாருங்க!
சென்னை: சென்னையில் அருவி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. மலையே இல்லாத இடத்தில் அருவி எப்படி சாத்தியம் என்கிறீர்களா.. சென்னை கேளம்பாக்கத்தில் தையூர் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் அருவி போல் ரம்மியமாக இருக்கும். சென்னையை சுற்றியுள்ள டாப் 5 சுற்றுலா தளங்களை இப்போது பார்ப்போம்.
சென்னை என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியாகும்.இங்கு மலை என்பது இல்லை. இங்கு அருகில் உள்ள பரங்கிமலையும், பல்லாவரம் மலையும் மிகச்சிறியவை, தென்மாவட்ட வட்டார வழக்கில் சொல்வது என்றால் இவை கரடுகள் ஆகும். சென்னையில் வெயில் அடித்தாலும் ஒரே அடியாக அடிக்கும்.மழை பெய்தாலும் ஒரே அடியாக பெய்துவிடும்.

சென்னையில வெயில் வந்தாலும் பிரச்சனை, மழை வந்தாலும் பிரச்சனை தான்.சென்னைக்கு பிடித்த மாதம் என்றால் டிசம்பர், ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்கள் மட்டும்தான். அந்த 3 மாதத்தில் மட்டும் தான் சென்னையில் வாழ்வது வரமாக இருக்கும். மற்ற மாதங்களில் அடிக்கும் வெயிலும் மழையும் நமக்கு சோதனையாகிவிடும்.
சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் பலரும் ஐடி நிறுவனங்களில், தொழில் நிறுவனங்களில், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வார இறுதியில் விடுமுறையை கழிக்க எங்காவது செல்வது வழக்கம். பொதுவாக சென்னைவாசிகள் எல்லாருமே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு, கூர்க் (கர்நாடகா), மேகலை, தேக்கடி போன்ற மலைவாசல் தளங்களுக்கு செல்வதைத்தான் விரும்புவார்கள்.
இவை எல்லாம் குறைந்தது 400 முதல் 600 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகள் ஆகும். இங்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் இரவு முழுவதும் பயணிக்க வேண்டும். தங்கும் விடுதிக்கு தனியாக செலவு செய்ய வேண்டும்.குறைந்தது 3 நாட்களாவது போனால் தான் இந்த பகுதிகளை சுற்றி பார்க்க முடியும். வார இறுதி நாட்களில் செல்வதால், அறை வாடகை உள்பட பலவற்றுக்கும் அதிகமான செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
ஆனால் நீங்கள் சென்னையில் ஒரே நாளில் சுற்றிவரக்கூடிய இடங்களுக்கு சென்று வந்தால் அரை வாடகை மிச்சம். பயண நேரமும் குறையும். பட்ஜெட் ரீதியாகவும் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட இடங்களை இப்போது பார்ப்போம். சென்னை நகருக்குள் மெரினா கடற்கரை தொடங்கி மாமல்லபுரம் வரை கடற்கரைகள் அதிகம். நாம் கடற்கரைகளை பற்றி இப்போது பார்க்க போவது இல்லை. அருவிகள் பற்றி பார்ப்போம்.

தடா அருவி: சென்னையில் நண்பர்களுடன் டிரெக்கிங் போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அற்புதமான இடம் என்றால் உப்பலமடுகு அருவி என்று அழைக்கப்படும் தடா அருவி பெஸ்ட். சென்னையில் இருந்து ஆந்திரம் செல்லும் வழியில், சுமார் 92 கி.மி., தொலைவில், சித்தூர் மாவட்டம் வரதப்பாளையத்துக்கு அருகில் வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த அழகிய அருவியில் குளிப்பது நிச்சயம் மிக அற்புதமான அனுபவமாக இருக்கும்.
பசுமையான வனப்பகுதியில் சில்லென்று வரும் அருவி நீரில் குளிப்பது சுகமாக இருக்கும். அதேநேரம் அருவி உருவாகும் மலைப்பகுதிக்கு செல்வது கடினமான பயணமாக இருக்கும். சாகசத்தை விரும்புவோருக்கு சிறப்பானது. சாலை வழியாக செல்வது எளிது. பேருந்தில் செல்வதாக இருந்தால், கோயம்பேட்டில் இருந்து காளஹஸ்தி போகும் பேருந்தில் சென்று, வரதபாளையத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஆட்டோவில் போகலாம்.

கிகடி நீர்வீழ்ச்சி: சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ தொலைவில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கிடிகி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வேலூர், பள்ளிக்கொண்டான், குடியாத்தம் வழியாக போக வேண்டும். இங்கே தனியாக செல்லவேண்டாம். நண்பர்களாக சேர்ந்து கூட்டமாக போகலாம். சொந்த வாகனத்தில் தான் போய் வர முடியும். பொதுப்போக்குவரத்து எளிதாக இருக்காது. நீண்ட தூரம் வாகனங்கள் போக முடியாது.
கிடிகி காட்டுப் பகுதியை அடைந்து, அங்கே வண்டியை நிறுத்திவிட்டு சுமார் 2 கிலோ மீட்டர் உள்ளே நடக்கவேண்டும். ஒத்தையடி பாதையில் சென்றால் கிகடி நீர் வீழ்ச்சி இருக்கும். இந்த இடம் கொஞ்சம் ஆழம் அதிகம் . எனவே பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம்.. ஆனால் இந்த காட்டுப்பகுதிக்கு முன்னதாக ஒரு சிறிய செக் டேம் இருக்கும். அங்கு ஆழம் குறைவாக இருக்கும். அங்கே குழந்தைகளை அழைத்து செல்லலாம். அதேநேரம் இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே கடைகள் ஏதும் கிடையாது. உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் தான் எடுத்துச் செல்லவேண்டும்.
கைலாசகோனா நீர்வீழ்ச்சிகள்: சென்னையில் இருந்து 92 கிலோ மீட்டர் தூரத்தில் கைலாசகோனா நீர்வீழ்ச்சி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி மலைகளுக்கு நடுவே உள்ளது. ஒரு பெரிய பாறையில் பிளவு ஏற்பட்டு தண்ணீர் கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடம் மிகவும் அமைதியாகவும், அழகாகவும் இருக்கும். மலை மேல் யாரும் ஏறக்கூடாது.

தலகோனா நீர்வீழ்ச்சிகள்: சென்னையில் இருந்து 192 கிலோ மீட்டர் தூரத்தில் தலகோனா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரில் உள்ள நெரபைலு கிராமத்திற்கு அருகில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்காவின் நடுவில் இந்த தலகோனா நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.
270 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சிகள் ரம்மியாக இருக்கும். இந்த தலகோனா நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள காடுகளில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. இந்த நீர் வீழ்ச்சி கொஞ்சம் ஆபத்தானது. மிகவும் கவனமாக குளிக்க வேண்டும்.

தையூர் அருவி: சென்னையில் ஒரு குட்டி அருவி இருப்பதாக சொல்லி கேள்விபட்டிருப்பீர்கள். பெரிய அளவில் இல்லை என்றாலும் நிச்சயம் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை தரும். சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் இந்த அழகிய அருவி அமைந்துள்ளது.
தையூரில் ஏரி நிரம்பி வழியும் போது அதன் அருகே ஒரு குட்டி அருவி உருவாகி பெருக்கெடுத்து ஓடும். அது பார்க்க அற்புதமாக இருக்கும். எட்டு அடி நீர்வீழ்ச்சி என்பதால் பெண்களும் குழந்தைகளும் எந்த பயமும் இன்றி குளிக்க ஏற்றதாக இருக்கும். ஆனால் தண்ணீர் நிரம்பி வழிகிறதா என்பதை உறுதி செய்துவிட்டு போக வேண்டும். இல்லாவிட்டால் போய் வருத்தப்பட வேண்டியதிருக்கும்.












Click it and Unblock the Notifications