மஞ்சுமெல் பாய்ஸ்.. ‘கண்மணி அன்போடு காதலன்’.. கொடைக்கானல் குணா குகையில் இளசுகள் வேறலெவல் சம்பவம்
கொடைக்கானல்: "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.." என்று 1990களில் வெளிவந்த கமல்ஹாசனின் குணா படத்தால் கொடைக்கானலின் அடையாளமாக உள்ள குணா குகை, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் மீண்டும் ட்ரெண்ட் ஆகி உள்ளது. குணா குகையை பார்க்க கொடைக்கானலுக்கு ஆர்வமுடன் வரும் இளசுகள் அந்த இடத்தை கொண்டாடுகிறார்கள் .
மலையாளத்தில் வெளியான மஞ்சுமோல் பாய்ஸ் திரைப்படம் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. குணா குகையில் விழுந்து சிக்கிய கேரள இளைஞர் மற்றும் உடன் அவர்களது நண்பர்கள் குழுவின் கதையை அற்புதமாக ரியலாக காண்பித்திருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த படம் கேரளாவில் சக்கை போடு போடுகிறது. தமிழ்நாட்டிலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேரடி மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த படத்தை அண்மையில் பார்த்த கமல்ஹாசன், நெகிழ்ந்து போய் பாராட்டினார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டினார்.
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்த இன்றைய இளைஞர்கள் மற்றும் இளசுகள் குணா குகை குறித்து தெரிந்த கொள்ள அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அத்துடன் கொடைக்கானல் வந்து குணா குகை முன்பு "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே.." என்று கமல்ஹாசன் ஜானகி பாடிய அந்த பாடலை கும்பலாக பாடி நடனம் ஆடி கொண்டாடி தீர்க்கிறார்கள்.
"இது மனிதர் உணர்ந்து மனிதக்காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது" "அபிராமி அபிராமி" என்று கமல்ஹாசன் அன்று கத்தியதை போல் இன்று ஏராளமான இளைஞர்கள் அந்த மலையின் முகட்டில் நின்று கத்துகிறார்கள்.. குணா குகையின் அடியில் யாருமே போக முடியாத அளவிற்கு அடைக்கப்பட்டுள்ள போதிலும், அந்த இடத்திற்கு சென்று பல்லாயிரம் அடி பள்ளத்தாக்கு உள்ள மலை உச்சியில் இருந்து ரசிக்கிறார்கள்..
பொதுவாகவே கொடைக்கானல் போகும் பலரும் குணா குகைக்கு சென்று வருவார்கள் என்றாலும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தால் மீண்டும் ஒருமுறை பிரபலம் ஆகியதுடன் டிரெண்டும் ஆகி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது கொடைக்கானலில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளசுகள் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் என்பதால் இன்றும் நாளையும் கொடைக்கானலில் இளைஞர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1991ல் தளபதி மற்றும் குணா திரைப்படம் ஒன்றாக வெளியானது.. அன்றைக்கு விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும், வணிக ரீதியாக பெரிய வரவேற்பை குணா பெறவில்லை.. கமல்ஹாசனை பொறுத்தவரை 10 வருடங்களுக்கு பின்பு எடுக்க வேண்டிய படங்களை, 10 வருடம் முன்பே எடுப்பார் என்ற பெயர் உண்டு.. அதன் காரணமாகவே சில படங்கள் காலம் தவறி ரசிக்கப்பட்டது. அப்படிப்பட்ட படம் தான் குணா.
ஒருவேளை குணா திரைப்படம் 2000களில் வெளிவந்திருந்தால் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள்... குணா படம் இப்போது கொண்டாடப்படும் நிலையில், குணா படம் மட்டுமல்ல.. குணா குகையும் கொடைக்கானலின் அடையாளமாக நினைவுகளை சுமந்தபடி பல ஆயிரம் ஆண்டுகள் இருக்க போகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..












Click it and Unblock the Notifications