அமெரிக்கா டூ கன்னியாகுமரி.. அக்காள் தங்கை ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்
கன்னியாகுமரி: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறிகாட்டியில், கிடங்கூர் பகுதியைச் சேர்ந்த பிலிப் என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் லண்டனில் வசித்து வருகிறார். பிலிப்பின் 2வது, 3வது மகள்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கன்னியாகுமரிக்கு சுற்றுலாவாக வந்தனர். ஆனால் அப்படி வந்தவர்களுக்கு யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி கடலை பொறுத்தவரை அமைதியான கடல் அல்ல. வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சந்திக்கும் இடம் இது. வெவ்வேறு திசைகளில் இருந்து வரும் நீரோட்டங்கள் இங்கே மோதிக்கொள்வதால், கடல் எப்போதும் ஒருவித கொந்தளிப்புடனேயே இருக்கும்.

கன்னியாகுமரியில் அலைகள் கரையை மோதும் வேகம் மிக அதிகம். குறிப்பாக விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். கரையை ஒட்டியே பல இடங்களில் ஆழம் அதிகமாக இருக்கும். கன்னியாகுமரியில் நீருக்கடியில் மறைந்திருக்கும் பாறைகள் மற்றும் சுழல்கள் நீந்தத் தெரிந்தவர்களுக்கே மிகவும் ஆபத்தானது. அப்படியான சூழலில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் சிக்கி கொள்கிறார்கள். அப்படி தான் அமெரிக்காவில் இருந்து வந்த கேரள சகோதரிகள் கடலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குறிகாட்டியில், கிடங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிலிப். இவருடைய மனைவி மேரி. இந்த தம்பதிக்கு எலிசபெத் பிலிப், ஆனி பிலிப் (வயது 35), மீரா பிலிப் (32) என 3 மகள்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகளான எலிசபெத் பிலிப் திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.
ஆனி பிலிப் எக்ஸ்ரே டெக்னீசியன் படித்துள்ளார். மீரா பிலிப் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகவில்லை. இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்களது சொந்த ஊரான கோட்டயத்துக்கு வந்து செல்வது வழக்கம் ஆகும்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் சகோதரிகள் இருவரும் ராமேஸ்வரம், மதுரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு கடந்த 26-ந் தேதி மாலையில் கன்னியாகுமரிக்கு வந்தனர். இங்குள்ள ஒரு விடுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கினர்.
இதையடுத்து மறுநாள் சகோதரிகள் இருவரும் விடுதியில் இருந்து வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் விடுதிக்குத் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், சகோதரிகள் கொடுத்திருந்த செல்போன் நம்பர் மூலம் அவர்களது தாயார் மேரியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்கள்.
இதையடுத்து மாயமான சகோதரிகளின் பெரியப்பா ஷிஜி மற்றும் உறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்து இருவரையும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ஷிஜி கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஸ்பாபு வழக்குப்பதிவு செய்து மாயமான சகோதரிகளைத் தேடி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் கன்னியாகுமரி வாவத்துறை கடலில் தூண்டில் வளைவு பகுதியில் 2 பெண்களின் பிணம் மிதப்பதாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக கிடந்தவர்கள் கன்னியாகுமரியில் மாயமான சகோதரிகள் ஆனி பிலிப், மீரா பிலிப் என்பது தெரியவந்தது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சகோதரிகளுக்கு என்ன நடந்தது, கடலில் இறங்கி குளித்தபோது அலையில் சிக்கி இறந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த இடத்தில் மாயமான சகோதரிகள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications