தெய்வமே திரும்பவும் வந்துட்டீங்களா.. ஊட்டி, கொடைக்கானலில் இப்படி ஒரு தரிசனத்துக்கு தவமே இருக்கணும்!
கொடைக்கானல்: சென்னையில் பழையபடி வெயில் கடுமையாகி வருகிறது. வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு இருப்பதால் பலரும் ஊட்டி, கொடைக்கால், மூணாறு , ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களை நோக்கி படை எடுத்த வண்ணம் இருக்கிறார்கள், இந்த வார இறுதியில், ஊட்டி, கொடைக்கானலில் கூட்டம் களை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் கடுமையாக இருந்த நிலையில், கத்திரி வெயில் தொடங்கிய சில நாட்கள் வெயில் வாட்டி வதைத்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கடுமையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 7ம் தேதி முதல் தமிழகத்தில் கோடை மழை பெய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தொடங்கிய மழை , அதன் பிறகு பரவலாக எல்லா இடங்களிலும் பெய்ய தொடங்கியது.

இந்த மழை தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் இந்த முறை நன்றாகவே இருந்தது. இந்த மழை காரணமாக வறண்ட கிடந்த ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து மிக அதிக அளவில் இருக்கிறது. சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்து வருகிறது.
இதனிடையே கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னல் மற்றும் 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்திலான பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் 29ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பில் கூறியுள்ளது. இதனிடையே கோடை மழை பரவலாக பெய்து வந்ததால், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், மீண்டும் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், தமிழ்நாட்டில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் இயல்பையொட்டியும், நாளை மறுதினமும் (சனிக்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (ஞாயிற்றுக்கிழமை) இயல்பைவிட அதிகமாகவும் இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த மூன்று நாட்களாகவே மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டாலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இரவில் கடுமையான வெப்பமும் புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சிறிது நேரம் கூட மின்விசிறியை ஆப் செய்ய முடியாத அளவிற்கு சென்னையில் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.
இது ஒருபுறம் எனில் பள்ளிகள் திறப்பு தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் பளளி குழந்தைகள் சுற்றுலா செல்ல அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதேபோல் குழந்தைகளுடன் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு இப்போது சென்றால் ரம்மியான கிளைமேட்டை அனுபவிக்கலாம் என பெற்றோர்களும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எனவே ஊட்டி, கொடைக்கானலில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு அருவிகளிலும் குளிப்பதற்காக மக்கள் படையெடுக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications