ஊட்டி போறீங்களா கண்ணு.. மலை ரயில்ல போக ஆசையா.. சுற்றுலா பயணிகளை திக்குமுக்காட வைத்த ரயில்வே
ஊட்டி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இயக்கப்படும் சிறப்பு மலை ரயில் சேவை அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டிக்கு பஸ்ல போகலாமா, கார்ல போகலாமா, பைக்ல போகலாமா அல்லது ரயிலில் போகலாமா என்று யாரை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள். அவர்கள் பதில் ரயிலில் போகலாம் என்று தான் வரும். வெள்ளைக்காரர்கள் விட்டு சென்ற பொக்கிஷமான விஷயங்களில் ஒன்று என்றால் அது ஊட்டி மலை ரயில் பாதையும் ரயிலும் தான். இனி இது போல் ஒரு ரயில் பாதையை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் ரயில் மிக மெதுவாகவே செல்லும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்தபடி செல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையின் அழகில் உங்களையே மறந்தவிடுவீர்கள். இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல. எப்படி மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற பல மாதம் முன்பே காத்திருக்க வேண்டுமோ அதுபோல் இதற்கும் காத்திருந்தே முன்பதிவு செய்ய வேண்டும்.
இப்படியான சூழலில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு விடப்படும் ரயிலை தாண்டி, இன்னொரு சிறப்பு மலை ரயிலும் கோடைக்கால சீசனை முன்னிட்டு இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மழைக்கு போன சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரயிலில் சென்று வந்தார்கள். தொடர்ந்து மலை ரயிலில் பயணிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கிறது.

இதையடுத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடை கால சிறப்பு மலை ரயில் சேவை, கடந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் அடுத்த மாத(ஆகஸ்ட்) இறுதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடனும், குன்னூர் முதல் ஊட்டி வரை 5 பெட்டிகளுடனும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.
இதில் மேட்டுப்பாளைம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். குன்னூர் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில் 80 முதல் வகுப்பு, 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும்.

முன்பதிவு கட்டாயம்: சனிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் ரயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications