ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு
சென்னை: கோடைக்காலம் தொடங்கிவிட்டது. 12ம் வகுப்பு தேர்வுகள், 10ம் வகுப்பு தேர்வுகள் என பலருக்கும் ஆண்டு தேர்வுகள் முடிந்துவிட்டது.இதனால் பலர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக ஊட்டி, கொடைக்கானலுக்கு படை எடுக்கிறார்கள். இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருருந்தது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்குள் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சுப்பிரமணிய கவுசிக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற , நீதிபதிகள் என் சதிஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வு சில முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, "தமிழ்நாட்டில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், நீலகிரி முதல் கன்னியாகுமரி அகத்தியர் மலை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, இருப்பில் வைக்க, கொண்டு செல்ல, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படுகிறது. வாகனங்களுக்கு அனுமதி வழங்கும் போது நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என மோட்டார் வாகன சட்டத்தில் நிபந்தனையை சேர்த்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடுதல் கட்டாயம் ஆகும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஊட்டி, கொடைக்கானல் உளிட்ட மலைப்பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், அவர்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊட்டி கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனைக்கு வரும் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களை, பிரித்து இலை, காகிதம் போன்ற மட்கும் தன்மையுடைய பொருட்களில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.
உணவுப்பொருட்கள் எடுத்து வரப்படும் பிளாஸ்டிக் பைகளை, வனப்பகுதியில் போடாமல், மீண்டும் உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். மஞ்சள் பை திட்டத்தின் விரிவாக்கமாக சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அமல்படுத்தலாம்.
பொது இடங்களில் குப்பைகளை சேர்வதை தடுக்க வியாபாரிகளுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து சென்னை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,"என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications