படம் நான் பார்க்கல, கருத்து சொல்ல முடியாது.. மாமன்னன் குறித்த கேள்வி.. ஒரே வரியில் முடித்த எடப்பாடி
சேலம்: உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் படம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கை வரலாறை காட்டும் விதமாக இருப்பதாகவும் அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று எடப்படி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாமன்னன்'. கடந்த மாதம் 29 ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ஒடுக்கப்பட்டோரின் அரசியலைப் பேசும் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

இந்த படத்தில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்ற கட்சியின் எம்.எல்.ஏவாக வடிவேலு உள்ளார். காசியாபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏவான மாமன்னன், சாதி ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை மீறி எப்படி மிக உயரிய இடத்துக்குப் போகிறார் என்பதே மாமன்னன் படத்தின் கதை. இந்த படத்தில் வடிவேலு சபாநாயகர் பதவியில் அமர்வது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
எனவே, மாமன்னன் கதாபாத்திரம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலை காட்டுவதாக பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பலரும் பதிவிட்டதை காண முடிந்தது. எனினும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது தந்தையின் கதாப்பாத்திரம் என்று பேட்டி ஒன்றில் கூறியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதிமுக முன்னாள் சபாநாயகரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படமாக மாமன்னன் எடுத்துள்ளதாக பேசப்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த எடப்படி பழனிசாமி கூறியதாவது:- நான் மாமன்னன் படம் பார்க்கல...பார்க்காமல் எப்படி கருத்து சொல்ல முடியும். நீங்கள் உதயநிதி ஸ்டாலினின் படம் பார்க்கிறீர்கள். நாங்கள் பார்க்கல.. பார்த்தால்தானே கருத்து சொல்ல முடியும். எங்களுடைய இயக்கம் வேற.. அவருடைய இயக்க வேற.. எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்து இருந்தால் அதுபற்றி கருத்து கேட்டால்.. படம் பார்க்கும் பட்சத்தில் நான் கருத்துக்களை கூற தயாராக இருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications