கொடைக்கானல் போறீங்களா.. சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தந்த எச்சரிக்கை
சென்னை: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சுற்றுலா தளமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம் கோடை வெயில் காரணமாக தன் பொழிவை இழந்து காணப்படுகிறது. அடிக்கடி கோடை மழை பெய்தால் மட்டுமே நிலைமை சரியாகும் என்கிற நிலையில். ஏனெனில் கொடைக்கானல் பகுதியில் வறண்ட வானிலை காரணமாக மலைப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் வன சரணாலயத்தில் 7 வனச்சரங்கள் இருக்கின்றன. இங்கு லட்சக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்தில் இவ்வனப்பகுதிகள் காட்டுத் தீயால் வெகுவாக பாதிக்கப்படுவது நடக்கிறது. இந்த தீயை கட்டுப்படுத்த வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. வனச்சரங்களில் தீ ஏற்படும் அபாய பகுதியை கண்டறிந்து தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீயை கட்டுப்படுத்தும் பணியினை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
எனினும் வறட்சி அதிகமாக உள்ளதால், திடீரென கொடைக்கானலை ஒட்டியுள்ள பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு, பல ஏக்கர் அளவிலான மரங்கள், செடி கொடிகள் எரிந்து நாசமாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வறண்ட வானிலை காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள், புதர் செடிகள் உள்ளிட்டவை காய்ந்து தீப்பிடித்து எரிவதாக கூறப்படுகிறது. அந்த தீயினை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
அண்மையில் மச்சூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு, பல ஏக்கர் அளவிற்கு மரங்கள் பற்றி எரிந்து சேதம் ஆகின. இதேபோல் பெருமாள் மலை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள வருவாய் நிலப்பகுதிகளிலும், தனியார் நிலப் பகுதிகளிலும் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டு பற்றி எரிந்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், பழனி சாலைப் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் பற்றி எரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தீயை அணைக்க போராடும் வனத்துறைக்கு கூடுதல் நிதியும், போதிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் ஊட்டியில் செய்வது போல் கொடைக்கானலிலும் காட்டுபகுதியில தீயை அணைக்க ஹெலிகாப்டர் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஏனெனில் மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகளில், மனிதர்களால் போகவே முடியாத உயரமான இடங்களில் தீயைக்கட்டுப்படுத்த இந்த முயற்சி அவசியம் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
அதேநேரம் கொடைக்கானல் சுற்றுலா வரும் பயணிகள் வறட்சி அதிகமாக உள்ள இடங்களில் எளிதில் தீப்பறக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாதும் என்றும், சிகரெட் குடித்துவிட்டு தீ வைப்பது, விளையாட்டாக தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.. அப்படி செய்தால் அது பேராபத்தாக முடியும் என்பதால் வனத்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.
இதனிடையே கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் காட்டுத் தீ எரிந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்கும் படி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications