கொடைக்கானல் மொத்தமும் அவ்வளவு ஹேப்பி.. சுற்றுலா வந்தவர்களுக்கு இயற்கை தந்த இன்ப அதிர்ச்சி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முழுவதும் நேற்று வானிலை வேறலெவலில் இருந்தது. மழையால் மொத்த மலையும் மாறியது. மலையைக் காண ஏங்கிய பூக்கள் அத்தனையும், துள்ளிக்குதித்து வெளியே வந்தன. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போல் மரங்கள் எல்லாம் சிலிர்த்தபடி பச்சைகொடி காட்டி வரவேற்றன.
நேற்றைய வானிலையை பார்த்து மரங்களே இப்படி எல்லாம் ரசித்தன என்றால் .. வனவிலங்குகளும், மக்களும் எப்படி ரசித்திருப்பார்கள் என்பதை யோசித்து பாருங்கள்.. மொத்தத்தில் நேற்றைய வானிலை, சுற்றுலா வந்தவர்களுக்கு இயற்கை தந்த இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இந்தியாவில் உள்ள சர்வேதச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களின் லிஸ்டை எடுத்தால் கொடைக்கானல் அந்த பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கும். கொடைக்கானலில் அப்படி என்ன இருக்கிறது என்றால், மிக அருமையான தட்ப வெப்ப நிலை.. ஆளை மயக்கும் அருவிகள்.. வானமே வியந்து போகும் அளவிற்கு இயற்கை வளங்கள்.. திரும்பிய பக்கம் எல்லாம் மரங்களும், காடுகளும் அதிகமாக இருக்கும்..இயற்கை இயற்கையாகவே இருக்கும் முக்கியமான சுற்றுலா தளம்..
மழை எப்போது வேண்டுமானாலும் விழும்.. நமது உடம்பு எப்படி வியர்வையால் அடிக்கடி நனையுமோ.. அதுபோல் அடிக்கடி மழையால் நனையும் பகுதி.. கொடைக்கானலில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நட்சத்திர ஏரி இருக்கிறது. இதேபோல் செயற்கையாக உருவாக்கப்பட்ட பேரிஜம் ஏரி இருக்கிறது. மன்னவனூர் ஆட்டுப்பண்ணை, பூம்பாறை முருகன் கோவில், குணா குகை, கோக்கர் வாக், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, மிகப்பெரிய பூங்கா, பைன் மரக்காடுகள், சிறுவர் பூங்கா.. படகு இல்லங்கள், ஏராளமான நட்சத்திர விடுதிகள், மனதை மயக்கும் குளிர் காற்று என பரவசப்படுத்தும் கொடைக்கானல்.
பூண்டு, பிளிம்ஸ், அவகோடா, மலை வாழைப்பழம், பேரிக்காய் போன்றவை அதிகம் விளையும் பகுதி கொடைக்கானல் தான்.. இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான சுற்றுலா தலங்களில் வரிசையில் கொடைக்கானல் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் ஆகும்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கடந்த பிப்ரவரி வரை குளிர்காலம் காணப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில் மெதுவாக மாறத்தொடங்கிய வானிலை, தற்போது முழுமையாக மாறிவிட்டது . கொடைக்கானலில் கோடை காலம் தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே பகலில் வெயில் மிக அதிகமாக இருக்கிறது. பனியில் வாடிய புல்வெளிகள், புதர்கள், செடிகள் எல்லாம் தற்போது கடும் வெயிலால் காய்ந்து கருகி வருகின்றன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்படுவது நடக்கிறது.. தரையில் தான் இப்படி என்றால் மலையிலும் இப்படி வெயில் அடிக்கிறதே என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதேநேரம் கொடைக்கானலில் கோடை மழை அடிக்கடி விழும் பகுதி என்பதால். கோடை மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர்.
இந்தநிலையில் கொடைக்கானலில் நேற்று பகல் வேளையில் மிதமான வெயில் காணப்பட்டது. மாலையில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதிகளான ஏரிச்சாலை, ஆனந்தகிரி, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி, அண்ணாநகர், கல்லறைமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணிநேரம் பெய்த மழையால் நகரமே குளுகுளுவென மாறியது. இயற்கை தந்த இந்த இன்ப அதிர்ச்சியால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இனி அடிக்கடி கோடை மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.. சித்திரை மாதம் பிறந்தால் கோடை மழை கொடைக்கானல் பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications