மதுவினால் கொலை களமாகிறதா நெல்லை, தென்காசி.. 5 நாட்களில் 6 கொடூர கொலைகள்! உலுக்கிய சம்பவங்கள்
நெல்லை: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 6 கொலைகள் அரங்கேறி மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இந்த 6 கொடூர கொலைக்கு பின்னாலும் இளைஞர்கள், தொழிலாளிகள் நாடிச்செலும் மதுபானம் தான் இருந்திருக்கிறது என்பது வேதனையளிப்பதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற செயல்களுக்கு போதைப்பொருட்களே முக்கிய காரணமாக இருக்கின்றன எனவும் டாஸ்மாக் மதுபானத்திற்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வரும் கருத்தாக உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைக்கின்றன.

5 நாட்களில் 6 கொலைகள்
எனினும், தற்போது வரை மதுவிலக்கு அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை என்பதே சமூக ஆர்லர்களின் ஆதங்கமாக உள்ளது. கொலை, கொள்ளை என குற்ற செயல்களை ஆராயும் போது அதற்கு ஒரே ஒரு மையப்புள்ளியாக பெரும்பாலான நேரங்களில் மது உள்ளிட்ட போதைப்பொருள் இருப்பதே தெரிய வருகிறது என்பது அவர்களின் வாதம்.
இத்தைய சூழலில்தான் தென் மாவட்டங்களில் கடந்த 5 நாட்களில் நடந்த 6 கொலை சம்பவங்கள் அனைத்தும் மது போதையில் நடைபெற்று இருக்கின்ற அதிர்ச்சிகர தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
திசையன்விளை குழந்தை கொலை

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் வசித்து வருபவர் பிருந்தா. இவரது கணவர் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் பிரியதர்ஷினி என்ற குழந்தை இருந்தது. இதற்கிடையே பிருந்தாவுக்கு 3 ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி பிருந்தாவை அவரது 3 ஆண் நண்பர்கள் சந்தித்து பாலியல் லீலை செய்ய அழைத்துள்ளனர்.
அப்போது அவரது வீட்டின் பின்புறம் ஆண் நண்பர்கள் 3 பேரும் மது அருந்திக்கொண்டு இருந்தனர். இதில் பிருந்தாவின் 3 வயது குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. பாலியல் லீலைகளுக்கு இடைஞ்சலாக இருப்பதாக மது போதையில் இருந்த அவர்கள் 3 பேரும் பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் மதுபானத்தை கொடுத்து வாயை பொத்தியுள்ளனர். இதில் அந்த குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிருந்தா, அவரது நண்பர்கள் பெஞ்சமின் 25, முத்து சுடர் 28, லிங்க செல்வன் 29 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வாலிபர்கள் 3 பேரும் மது போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளம் தொழிலாளி கொலை
இதேபோல் கூடங்குளம் அருகே காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சேகர் (வயது 49). கடந்த 26 ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் சேகரை கல்லால் அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆவுடையாபுரம் இசக்கிமுத்து (23), சகோதரர் வைணவ பெருமாள் (26) உள்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவமும் மது அருந்திக்கொண்டு இருந்த போது தான் அரங்கேறியுள்ளது.
டாஸ்மாக் பாரில் ஓசி சிகரெட்டுக்காக கொலை

தென்காசி மாவட்டம் துப்பாக்குடி கிராமத்தில் உள்ள அரசு மதுபான டாஸ்மாக் பாரில் நேற்று அடைச்சானியை சேர்ந்த திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆன மாரிமுத்து (30) என்பவர் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பிரம்மதேசத்தை சேர்ந்த வேல்முருகன், ராஜபாண்டி உள்பட 3 பேர் வந்து மது குடித்துள்ளனர். அப்போது மாரிமுத்துவிடம் ஓசியில் சிகரெட் கேட்டு அவர்கள் தகராறு செய்துள்ளனர்.
இந்த தகராறு முற்றியதில் மாரிமுத்து தன் தம்பியை போன் செய்து அழைத்து இருக்கிறார். இதையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி பேசியதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது பீர் பாட்டிலை எடுத்து தலையில் தாக்கியதில் புதுமாப்பிள்ளை மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இன்னொருவர் நெல்லை ஐகிரவுண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளகாதல் விவகாரத்தில் கொலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே நாலாங்கட்டளை என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆமோஸ் (26). இவரது மனைவி நந்தினி. கட்டிட தொழிலாளியான ஆமோசுடன் அந்தோனி என்பவர் வேலை செய்து வந்தார். ஆனால் அந்தோனி ஆமோசுக்கு தெரியாமல் அவரது மனைவி நந்தினியுடன் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த காதல் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை அறிந்த ஆமோஸ் அந்தோனியை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆமோசை மது போதையில் நந்தினியுடன் சேர்ந்து அந்தோனி தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் நந்தினி மற்றும் அந்தோனியை போலீசார் கைது செய்தனர்.
பழவூர் செட்டிகுளம் கொலை
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே செட்டிகுளத்தை சேர்ந்த ரெஜிமென் என்ற 19 வயது வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த சந்தனகுமார் (35) என்பவரிடம் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்து இருந்தார். இந்த பணத்தை திருப்பி கேட்ட விவகாரத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் சந்தனகுமார் மதுபோதையில் ரெஜிமனை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரது அரிவாளை பிடுங்கி சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் சந்தனகுமார் உயிரிழந்தார்.
சொத்து தகராறில் சித்தப்பா கொலை
இதேபோன்று நெல்லை மாவட்டம் பொன்னாக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் (49), அவரது சகோதரர் மாரிமுத்துவுக்கு சொத்து தகராறு இருந்து வந்தது. இதில் அடிக்கடி தகராறு வந்ததால் மது போதையில் மாரிமுத்து மகன் இசக்கிமுத்து (28) சித்தப்பா என்றும் பாராமால் இரும்பு கம்பியால் அடித்து அருணாச்சலத்தை கொலை செய்தார்.












Click it and Unblock the Notifications