தூக்கிப்போட்டுட்டோம்ல.. ஆண்களுக்கு நிகராக இளவட்டக்கல்லை தூக்கி வீசிய பெண்கள்.. இது நெல்லை வீரம்
திருநெல்வேலி: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்று இளவட்டக்கல்லை தூக்கி அனைவரையும் வியக்க வைத்தனர். இந்த போட்டியில் கல்லூரி மாணவி ஒருவர் முதல் பரிசு வென்றார்.
இளவட்டக்கல்.. முன்காலத்தில் நம் தமிழர்களிடம் பின்பற்றப்பட்டு வந்த ஒரு போட்டியாகும். அதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆண் இளவட்டக்கல்லை தூக்கி தனது பலத்தை காட்ட வேண்டும். அப்போது தான் அந்த இளைஞனுக்கு திருமணம் நடக்கும். இந்த வழக்கம் முன்காலத்தில் தமிழர்களில் ஒரு தரப்பினரிடம் இருந்தது.

அதன்பிறகு காலப்போக்கில் இந்த இளவட்டக்கல் தூக்குவது மறைந்துவிட்டது. தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டாரங்களில் இன்னும் கூட இளவட்டக்கல் போட்டி நடந்து வருகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையின்போது ஆண்களும், பெண்களுக்கும் இளவட்டக்கல் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படும்.
அந்த வகையில் நேற்று இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி நேற்று திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரோஸ்மியா புரம் ஸ்ரீரகுநாதபுரத்தில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர். அதேபோல் திருமணமான பெண்கள், ஆண்களும் ஆர்வமாக பங்கேற்றனர்.
மாவடி, வடக்கன்குளம், வடலிவிளை அழகப்பபுரம் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர். 20 கிலோ முதல் 124 கிலோ வரை எடை கொண்ட இளவட்டக்கற்கள் தூக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கினர். கல்லூரி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரும் இளவட்டக்கல்லை போட்டிப்போட்டு தூக்கினர்.
பெண்கள் பிரிவில் 55 கிலோ இளவட்டக்கல்லை அதிக முறை தூக்கி வடலிவிளையை சேர்ந்த கல்லூரி மாணவி லெஜின் முதல் பரிசு வென்றார். ராஜகுமாரிக்கு 2ம் பரிசு கிடைத்தது. ஆண்களுக்கான பிரிவில்மாவடியைச் சேர்ந்த சிவலிங்கம் முதல் பரிசையும், வடக்கன் குளத்தை சேர்ந்த விநாயக் 2வது பரிசையும் தட்டிச்சென்றனர்.
ஸ்ரீரகுநாதபுரத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல்லை தூக்கி மிரளவிட்டது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அதனை பார்ப்போர் இளவட்டக்கல்லை தூக்கிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications