படங்களில் லாக்-அப் மரணங்களை நியாயப்படுத்தியவர் விஜய்! கனிமொழி விமர்சனம்
நெல்லை: சில நடிகர்கள், அவங்க நடிக்க கூடிய படங்களில் லாக் அப் டெத்தினை நியாயப்படுத்தும் வகையில் நடித்தார்கள். ஆனால் இப்போது புதிதாக அரசியலில் காலடி எடுத்த வைத்த பிறகு, மக்கள் மீது அக்கறை இருப்பது போல பேசுவதை பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது என விஜய்யின் போராட்டம் குறித்த கேள்விக்கு கனிமொழி எம்பி பதில் கூறினார்.
கனிமொழி எம்பி இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்,
தவெக தலைவர் விஜய், அஜித் குமார் லாக் அப் டெத் வழக்கில் மன்னிப்பு கேட்டது போன்று, தமிழகத்தில் இதுவரை காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த 24 பேரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் கூறியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து கனிமொழி கூறியதாவது:-

நகைச்சுவையாக இருக்கிறது
ஒரு திரைப்படம் என்பது மக்களுக்கு செய்திகளை சொல்லக்கூடிய ஒன்று. சில நடிகர்கள், அவங்க நடிக்க கூடிய படங்களில் லாக் அப் டெத்தினை நியாயப்படுத்தும் வகையில் நடித்துவிட்டு, தற்போது புதிதாக அரசியலில் காலடி எடுத்த வைத்த பிறகு மக்கள் மீது அக்கறை இருப்பது போல பேசுவதை பார்க்கும் போது நகைச்சுவையாக தான் இருக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நெல்லை செங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளின் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய கனிமொழி, பாஜகவின் அடக்கு முறைகளை எதிர்த்து கேள்வி கேட்கும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். திமுக பல போராட்டங்களை பார்த்தது. டெல்லியில் இருப்போருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்
இந்த நாடே நம்மை பார்த்து பிரம்மிக்கக் கூடிய ஒரு போர் குணத்தோடு திமுக உள்ளது. தற்போது 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்துடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் வரலாற்று பெருமைகளை மத்திய அரசு மறைத்து, மறுதலிக்க துணிந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பதைக் கொண்டு வந்து அடக்க நினைக்கிறது.
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், தமிழகம் வளர்ந்த மாநிலமாக மாறிவிடக்கூடாது, அதனை முடக்க வேண்டும் என மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒரு சிறப்பான ஆட்சியை முதல்வர் கொடுத்து வருகிறார். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி வருகிறோம். இந்த முறை கட்டாயம் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
கடுமையாக விமர்சித்த விஜய்
தான் போட்டியிடக்கூடிய ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறது பாஜக. அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது" என்று பேசினார். விஜய் நேற்றைய போராட்டத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். விஜய் பேசுகையில், "அஜித் குமார் குடும்பத்தினரிடம் மட்டும் சாரி கேட்டால் போதாது.. காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் சாரி கேட்க வேண்டும்..
வெற்று விளம்பர மாடல் திமுக இப்போது ஸாரிம்மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது.. சாத்தான்குளம் சம்பவத்தை ஆணவம் என்றால் இதற்கு பெயர் என்ன சிஎம் சார்.. எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் சொன்ன பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதற்கு அரசாங்கம்.. எதற்கு சிஎம் பதவி? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து பதில் வராது.. பதில் இருந்தால் தானே சொல்வீங்க.. அதிகபட்சமாக சாரி வேண்டும் என்றால் சொல்வீங்க.. என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.












Click it and Unblock the Notifications