பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறமாட்டோம்... தமிமுன் அன்சாரியின் மஜக தீர்மானம்
நெல்லை: பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் பாமக, தேமுதிக, தமாகா ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்நிலையில் நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியதாவது: பெரிய அரசியல் கட்சிகள் கூட இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. கூட்டணி குறித்து நிர்வாக குழு கூடி ஆலோசித்து முடிவு செய்வோம்.
பாஜக கூட்டணியில் இல்லை
சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெறப் போவதில்லை என செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்கையும் உழைப்பும் பலன் தராமல் போய்விடக் கூடாது என்ற அடிப்படையில் எங்களது கூட்டணி அமையும்.
சசிகலா உடல்நிலை
சசிகலா பூரண உடல் நலன் பெற்று வீடு திரும்பவேண்டும் என்பதே எங்களது நோக்கம். பொதுமக்களிடமும் சசிகலாவின் உறவினர்களுக்கும் அவரது உடல்நிலை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை மீது வழக்கு
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு கடுமையான இன்னல்களை தந்துவருகிறது. மத்திய அரசு, இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட வேண்டும். தமிழர்கள் பிரச்சனையில் மாற்றாந்தாய் மனப்பான்மையாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனுக்காக மதிமுக அறிவித்துள்ள போராட்டத்திற்கு மனித நேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது.
கலாம் சொன்ன தீர்வு
தமிழக- இலங்கை மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதைப் போல இருதரப்பும் ஒரு நாள் விட்டு ஒருநாள் மீன்பிடிப்பது என முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார்.