நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: கஸ்டடிக்கு செல்லும் சுர்ஜித், சரவணன்? சிபிசிஐடி அதிரடி மூவ்!
நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த ஜூலை 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் பெற்று தகனம் செய்தனர். கவினின் கொலை வழக்கானது, இப்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணைக்காக சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications