Nellai Kavin: ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினை இன்ஸ்பெக்டர் மிரட்டினாரா? நெல்லை மாநகர காவல்துறை மறுப்பு!
நெல்லை: நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியர் கவினை, காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துளளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

தனது சகோதரியை பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் காதலித்ததால் அவரை சுர்ஜித் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று கவின் உடலைப் பெற்றுக்கொண்ட அவரது குடும்பத்தினர் இன்று இறுதிச் சடங்கு செய்து, தகனம் செய்தனர்.
திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை வழக்கில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கவினின் தந்தை கூறியதாக கூறப்படுகிறது. காதலை கைவிடும் படியும், இல்லையெனில் கை, கால்களை உடைத்து விடுவதாக கவினை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், "பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன், கவினிடம் எந்த சட்ட விரோதமான விசாரணையும் செய்யவில்லை. காசிப்பாண்டியன் மிரட்டியதாக கவினின் தந்எதை சந்திரசேகரன் பேட்டியில் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது' என நெல்லை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "இது தொடர்பான வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் ஒரு செய்தி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் "ஆணவக்கொலை கட்ட பஞ்சாயத்து? நெல்லையில் நிகழ்ந்த ஜாதி ஆணவ கொலையில் பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மீது புகார் கை, கால்களை உடைத்து விடுவேன் என கூறி மிரட்டிய ஒரே வாரத்தில் கொலை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு" என்ற செய்தி வெளியிட்டுள்ளது.
இது சம்மந்தமாக செல்வகணேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அவரது காதல் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் திருநெல்வேலி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படவில்லை என்றும், திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள காவல் ஆய்வாளர் எவரும் கொலையுண்ட செல்வகணேஷிடம் எந்த வித விசாரணையும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது எனவே வலைதளங்களில் காவல் ஆய்வாளர் பற்றி வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படை ஆதாரமின்றி உண்மைக்கு புறப்பானது" என நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications