‘விஜய் எப்ப வந்தார்.. எங்க தலைவர் சும்மாவா’.. தவெக சர்வே டீமை சுற்றிய பாமகவினர்
கள்ளக்குறிச்சி: தவெக கட்சி தலைவர் விஜய்க்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தினர் சர்வே எடுக்க சென்றுள்ளனர். அதில் மக்கள் விரும்பும் முதல்வர் என்கிற பிரிவில் விஜய், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகிய 4 பேரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இதைப் பார்த்து கடுப்பான உள்ளூர் பாமகவினர், "இவர் எத்தனை தேர்தலில் நின்றுள்ளார். எங்கள் தலைவர் படம் எங்கே. நாங்கள் எல்லாம் யார். மற்றவர்களை ஏன் அவமானப்படுத்த ஏன் போலி சர்வே எடுக்கிறீர்கள்." என்று சுற்றி வளைத்து கேள்விகளால் லாக் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முழுதாக 10 மாதங்கள் தான் இருக்கிறது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. திமுகவை பொறுத்தவரை, ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தவெக சார்பில் மக்கள் விரும்பும் முதல்வர் விஜய் என்கிற பெயரில் வீடு வீடாக சென்று பரப்புரை செய்ய தொடங்கிவிட்டனர். நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. பாமக நிலை தான் சற்று கவலையாக உள்ளது. ராமதாஸ், அன்புமணி இடையே நிலவி வரும் பனிப்போர் அந்தக் கட்சியினரிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் தனித்தனி ரூட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்புமணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபயணம் தொடங்குகிறார். கடந்த சில தேர்தல்களாக அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகம், சர்வே என்று எல்லாவற்றுக்கும் தனித்தனியாக டீம் வைத்துள்ளனர். கள நிலவரத்தை தெரிந்து கொள்ள அந்தந்த கட்சியினர் சர்வே எடுப்பது வழக்கம்.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மணலூர்பேட்டை அருகில் 5 நபர்கள் சர்வேயில் ஈடுபட்டனர். காலை நேரமே சர்வேக்கு சென்றுள்ளனர். அப்போது முதலமைச்சர் வேட்பாளர் பிரிவில் விஜய், முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
சர்வே படிவத்தில் முதல் இடத்தில் விஜய் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. சர்வே எடுக்க வந்த நபர்கள் அந்த படிவத்தை மக்களிடம் காட்டி பரபரப்பாக சர்வே எடுத்து வந்தனர். அப்போது அங்கிருந்த பாமகவினர் கையிலும் இந்த சர்வே படிவம் சென்றுள்ளது. அவர்கள் அதைப் பார்த்து கடுப்பாகிவிட்டார்கள்.
பாமக மாநில துணை தலைவரும் அன்புமணியின் ஆதரவாளருமான மணிகண்டன் சர்வே எடுக்க வந்த நபர்களை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். "நீங்கள் யாருக்காக. எந்த அடிப்படையில் இந்த சர்வே எடுக்கிறீர்கள். இந்த பட்டியலில் முதல் இடத்தில் தற்போதைய முதலமைச்சரின் படம் தானே இடம் பிடித்திருக்க வேண்டும். விஜய் இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டதா. அவர் எப்போது அரசியலில் வந்தார். முதலில் தேர்தல் களத்தில் நின்று மக்களிடம் அங்கீகாரம் வாங்கிவீட்டு உங்கள் படத்தை முதலில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தொகுதிக்கு அதிகம் செய்த விஜய்காந்த் படம் இல்லை. மத்திய அமைச்சராக இருந்த எங்கள் தலைவர் அன்புமணியின் படம் இல்லை.
திருமாவளவன் படம் எங்கே. இவர்கள் மட்டும் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பிம்பத்தை மக்களிடம் நீங்கள் திணக்க கூடாது. இவர்கள் 4 பேர் மட்டும் தான் தமிழ்நாடா. அனைத்துக் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் எடுத்தால் மட்டுமே அந்த சர்வே நியாயமாக இருக்கும் வேண்டும்." என்று கூறினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications