அரியலூரில் வெறும் டைனோசர் முட்டை மட்டும்தான் இருக்கா! இல்லீங்க செம டூர் ஸ்பாட்டும் இருக்கு பாருங்க
அரியலூர்: தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதியாகும். கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான எச்சம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கப்பெற்றிருக்கிறது. ஆனால் அரியலூரில் மட்டும்தான் மனிதர்களுக்கும் முந்தைய வாழ்ந்த கடல் உயிரினங்களின் எச்சம் கிடைத்துள்ளது. எனவே இந்த பகுதியில் கடல் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல சம்மரை கழிக்க ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கிறது.
சரி இப்போ விஷயத்துக்கு வருவோம். அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிடைச்சது டைனோசர் முட்டையே கிடையாதாம். அது கடல் உயிரினங்களின் படிமங்களாம். மேலே சொன்னதை போல அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் ஒரு காலகட்டத்தில் அதாவது சுமார் 10 கோடி வருஷத்துக்கு முன்னாடி இது கடல் பகுதியாக இருந்திருக்கலாம். எனவே இங்கு வாழ்ந்த உயிரினங்கள் இறந்துபோய் அப்படியே கடல் படிமங்களாக மாறிவிட்டது. அதை தவிர்த்து, பெரிதும் அடையாளம் காணப்படாத அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.

மேலப்பழுவூர் & கீழையூர் சோழர் கால கோயில்கள், திருமழப்பாடி சங்க கால ராணுவ முகாம், காமரசவல்லி வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில், மகேந்திரவர்ம பல்லவன் காலத்திய கோவிந்தப்புத்தூர் கோயில், விக்கிரமங்கலம் பௌத்த சிற்பங்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட செந்துறை, சென்னிவனம், ஸ்ரீபுரந்தான் சிவன் கோயில்கள், கங்கைகொண்டசோழபுரம், கோதண்டராமசாமி கோவில், வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம், ஏலாக்குறிச்சி, கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கீழப்பழுவூர் புதைப்படிம அருங்காட்சியகம், அணைக்கரை அணை, பெலாந்துறை அணை ஆகியவை சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.
இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள பெரும்பாலான கோயில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் பழமையான கோயில்களாகும். சோழர்களின் பூமியான இங்குள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அனைவரும் அறிந்திருப்போம். அதேபோல மிகவும் பழமையான கோயில் எனில் அது மேலப்பழுவூர் மற்றும் கீழையூர் பகுதியில் அமைந்துள்ள கோயில்களாகும். இங்குள்ள கோயில்கள் பழுவேட்டையர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். கி.பி 884 அதாவது 1,016 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. பழுவேட்டையர்கள் என்பவர்கள் கேரளாவிலிருந்து பெரும் செல்வத்துடன் வந்தவர்களாவார்கள். அவர்கள் சில குறிப்பிட்ட நில பகுதியில் ஆட்சி செய்து வந்தனர்.
இவர்களுடன் சோழர்கள் திருமண உறவை கொண்டிருந்தனர். இப்படியான திருமண சடங்குகள் நிச்சயிக்கப்படும் முக்கிய இடமாக மேலப்பழுவூர் மற்றும் கீழையூர் கோயில் இருந்துள்ளன. அதேபோல சோழர்கள் இந்த பகுதியில் நாணய தொழிற்சாலைகளையும் கொண்டிருந்தனர். மேலப்பழுவூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், கீழையூரில் இரட்டை கோயில்களும் அமைந்திருக்கின்றன. இவை இரண்டுமே ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.
அடுத்து உள்ள கோயில் திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலாகும். இங்கு சங்க காலத்தில் மன்னர் ராணுவ முகாமை கொண்டிருந்தனர். இதனையடுத்து 1093 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாம் ஆதித்ய சோழனால் சிவனுக்காக வைத்தியநாத சுவாமி கோயில் எழுப்பப்பட்டது. இந்த கோயில் நடைபெறும் நந்தி கல்யாணம் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேபோல காமரசவல்லி வாலாம்பாள் அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோயிலும் 1038 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவிந்தப்புத்தூர் கங்கை ஜகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் கர்நாடகாவை சேர்ந்த அம்பலவாண பழுவூர் நாயக்கரால் 1020 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுக்களில் இங்கு வாழ்ந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அரசர்களின் ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து பல்வேறு விஷயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நாம் பார்த்த அனைத்தும் சைவ மதத்தின் கோயில்கள்தான். ஆனால் இதே காலத்தில் பௌத்த மதமும் ஓரளவு சிறப்பாக வாழ்ந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக சில புத்தர் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் அதாவது 908 ஆண்டுகளுக்கு முன்னர் விக்கிரமங்கலம் எனும் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மதங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப் போல பௌத்த மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு பெரிய புத்தர் சிலைகளும் அதனுடன் இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல செந்துறை, சென்னிவனம், ஸ்ரீபுரந்தான் சிவன் கோயில்கள், அரியலூர் கோதண்டராமசாமி கோயில் ஆகிய கோயில்கள் சிறப்பு வாயந்தவையாகும். கோயில்களை தவிர வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். 453.71 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் பல அரிய வகை பறவைகள் வலசை வருகின்றன. தமிழ்நாட்டின் நன்னீர் ஏரிகளில் ஒன்றான இதற்கு மேட்டூர் அணையிலிருந்தும், வடகிழக்கு பருவமழை மூலமும் நீர் வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாத காலங்கள் இந்த சரணாலயத்தை பார்வையிட ஏற்ற காலமாகும்.
இது தவிர சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஏலாக்குறிச்சி தேவாலயம் கிறிஸ்தவம் இந்த மாவட்டத்தில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மதமாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். அதேபோல பெலாந்துறை அணையும் சுற்றிப்பார்க்க ஏற்ற இடமாகும். அரியலூரிலிருந்து 43 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணைக்கு வெள்ளாற்றிலிருந்து நீர் வருகிறது. பெலாந்துறை அணையை போலவே அணைக்கரை அணையும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த அணைக்கு ஆண்டின் பெரும்பாலான நாட்களின் நீர் வந்துகொண்டே இருக்கும். எனவே இந்த இடம் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications