விட்டாச்சு லீவு..கொடைக்கானலுக்கே மூச்சு முட்டுதே! ஒரே நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்..செம ட்ராஃபிக்
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர் கொடைக்கானல் நட்சத்திர ஏரியிலிருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி வரை சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
தமிழகத்தில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மிகச்சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து மட்டும் இன்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கூட தமிழகத்திற்கு வந்தால் மறக்காமல் விசிட் அடிக்கும் இடமாக கொடைக்கானல் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து இருக்கும் கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இங்குள்ள சீதோஷ்ண நிலையும் இயற்கை அழகுகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இடமாக உள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது இங்குள்ள டிராபிக்தான். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு பல மணி நேரம் வீணாகிவிடுதால், பல இடங்களுக்கு போக திட்டமிட்டு செல்ல முடியாமல் கூட சுற்றுலா பயணிகள் பலரும் திரும்பி வருவதை காண முடியும்.
குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட புகழ்பெற்ற இடங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை, பண்டிகை காலங்கள், கோடை விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது இ பாஸ் நடைமுறையானது அமலில் இருக்கிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நட்சத்திர ஏரி வரை சுமார் 7 கிலோமீட்டர் அளவில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் தனியார் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் முறையான வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாத காரணத்தாலும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதாலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. நேற்றைய முன் தினம் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணத்தினால் கொடைக்கானலுக்கு நேற்றும் இன்றும் அதிக அளவு சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர் .
ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவு ஏற்படுகிறது. நட்சத்திர ஏரி அருகே சுற்றுலா பயணிகளின் பேருந்துகள் நிறுத்தும் அவலம் இருப்பதாலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் முறையான வாகன நிறுத்துமிடம் அதிவிரைவில் அமைத்திட வேண்டும், சாலை ஓரம் இருக்கும் உணவு விடுதி தனியார் தங்கும் விடுதி வாகனங்களை சாலையில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரால் அறிவிக்கப்பட வேண்டும் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே மலை வாசஸ்தலங்களில் இ-பஸ் நடைமுறை கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அதனையும் மீறி எப்படி போக்குவரத்து எரிசல் ஏற்பட்டது என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலா பயணிகள். அதுமட்டுமல்லாமல் சாலையோர ஆக்கிரமிப்புகளும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு முக்கிய காரணம் எனவும் அதனையும் அகற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications