கொடைக்கானல் ஊட்டிக்கு பதில்.. கடவுள் தேசத்தின் கனவு பாதை.. தேனியை தாண்டி காத்திருக்கும் புதிய தேவதை
தேனி: ஊட்டி, கொடைக்கானல் போன பலர், இந்த பொங்கலுக்கு மூணாறு போய் பாருங்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் போடி மெட்டு மூணாறு சாலை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையில் பயணிப்பதற்காகவே போய் பாருங்கள். தேனி தாண்டினாலே இயற்கை தேவதையின் தரிசனத்தை உணர்வீர்கள்..
இயற்கை எல்லா அழகையும் சொல்லி வைத்தார் போல், ஒன்றாக அள்ளி கொட்டிக் கொடுத்திருக்கும் பூமி இந்த உலகத்தில் உள்ளது என்றால் அது கேரளா தான். தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கு இணைப்பான பகுதியான தேனியை அடுத்த போடி மெட்டும், மூணாறும் உண்மையில் கடவுள் தேசத்தின் கனவு பாதை என்ற அழைக்கலாம். ஏனெனில் தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறுக்கு இப்போது போய் பாருங்கள். இப்படி சொல்ல காரணம் அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்த புதிய சாலை தான்.

சுற்றுலா செல்வோருக்கு வரப்பிரசாதமாக இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் தேனி மாவட்டத்தில் உள்ள போடிமெட்டுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மலைப்பாதை மிகவும் குறுகலாக இருந்த காரணத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். தமிழ்நாடு பகுதியில் சாலை நன்றாக இருக்கும். கேரளா பகுதியில் மிக குறுகலாக கடினமாக இருக்கும்.
இந்நிலையில் போடிமெட்டு முதல் மூணாறு வரை மலைப்பாதையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து ரூ.371 கோடியே 83 லட்சத்தில் மலைப்பாதையில் விரிவாக்கம் செய்யும் பணியை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. இந்த பணியை மத்திய தரை வழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி மூணாறுக்கு நேரில் வந்து தொடங்கி வைத்தார்.
2017ம் ஆண்டு பேசிய நிதின் கட்கரி, 3 ஆண்டுகளில் சாலை விரிவாக்க பணி முடிவடையும் என்றார். ஆனால் 2018-ம் ஆண்டு கனமழை காரணமாக மூணாறில், இந்த சாலை செல்லும் கேப்ரோடு என்ற பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை விரிவாக்க பணி மொத்தமாக முடங்கியது. பின்னர் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே பணி தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் பணிகள் முடிந்தது.

இதையடுத்து சாலையை திறப்பதற்காக 3 முறை முடிவு செய்யப்பட்டது. 3 முறையும் அமைச்சர் நிதின் கட்கரி மூணாறுக்கு வரவில்லை. இதனால் திறக்கப்படவில்லை. இதனிடையே மூணாறு-போடிமெட்டு சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றதுது. இந்த விழாவில் மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு சாலையை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மூணாறு-போடி மெட்டு சாலையை நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த சாலை செல்லும் லாக்காடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியும் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நிதின் கட்கரி மூணாறுக்கு வரவில்லை..

இப்போது விஷயத்திற்கு வருவோம்: போடி மெட்டு மூணாறு பாதை உண்மையில் கடவுள் தேசத்தின் கனவு பாதையாக உள்ளது. கேராளவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மூணாறு, கொடைக்கானலுக்கு அப்படியே நேர் எதிராக பின்பக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட கொடைக்கானலுக்கு நிகரான உயரத்தில் தான் மூணாறும் இருக்கிறது. பொதுவாக மலைப்பாதையில் சாலைகள் அமைப்பது எளிதானது அல்ல. சாலைகள் குறுகிய அளவிலேயே அமைக்க முடியும். ஆனால் போடிமெட்டு மூணாறு சாலை மழைநீர் வடிகால்களுடன் மிக அகலமாக தரையில் அமைப்பது போல் அமைத்திருக்கிறார்கள்.
பசுமை போர்த்திய மலையில் மிக அகலமான நெடுஞ்சாலையில் கிளைமேட்டை என்ஜாய் பண்ணியபடி பயணிப்பது சூப்பர் அனுபவமாக இருக்கும். பொதுவாக பொங்கல் சமயத்தில் எல்லாம் மூணாறு பகுதியில் மழையே இருக்காது. கிளைமேட் அருமையாக இருக்கும். தேனியை தாண்டும் போதே இயற்கை தேவதை உங்களை மெய்சிலிர்க்க வைத்துவிடுவாள் போய் பாருங்கள்.. நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications