அதிகாலை வந்த அலர்ட்.. சென்னை உட்பட 10 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கொட்டும் மக்களே!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை கொட்டி தீர்த்தது.. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கனமழை கொட்டியது.

இதனால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மறுநாளே நீர் வடிந்த போதிலும், நகர் முழுக்க நீர் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்ப சில நாட்கள் வரை ஆனது.
கனமழை: அதன் பிறகு ஓரிரு வாரங்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இந்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இப்படி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து கனமழை தமிழகத்தில் கொட்டியது. இதனால் பாதிப்புகள் மோசமாக இருந்த நிலையில், இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
அடுத்த 3 மணி நேரம்: அதன் பிறகு தமிழகத்தில் பெரியளவில் எங்கும் மழை இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 10 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சில இடங்களில் நீர் தேங்கலாம் என்றும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் மாவட்டத்திலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம் சொல்வது என்ன: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், " இன்று ஜன. 6ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல ஜன. 7ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications