நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காலை முதல் கனமழை! குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்யலாம்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று கனமழை பெய்யலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை எச்சரிக்கை பட்டியலில் வராத, பிற மாவட்டங்களில், இன்றும், நாளையும், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாகையில் காலை முதலே சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கிறது. பூதங்குடி, அம்புல் பொறக்குடி, நடுக்கடை, ஏனங்குடி , கயத்தூர், மஞ்சக்கொள்ளை, பொரவாச்சேரி, வடகுடி, தெத்தி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவாரூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் அதன்படி இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது மிதமான மழை பெய்து வருகிறது குறிப்பாக திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளான அடியக்கமங்கலம், மாவூர், மாங்குடி ,அம்மையப்பன், கொரடாச்சேரி, கண்கொடுத்தவனிதம், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது .
தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கிய நிலையில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. கடலில் காற்று பலமாக வீசிவரும் நிலையில் நாட்டு படகு, விசை படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஏற்கெனவே மீன் பிடிக்க சென்றவர்களும் கரை திரும்பிவிட்டனர்.












Click it and Unblock the Notifications