மிக்ஜாம் புயல் மிரட்டுதே.. சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மழை கொட்டும்! அலர்ட்டா இருங்க மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த மண்டலம் புயலாக வலுப்பெறும் நிலையில், இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை டிசம்பர் 4ஆம் தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் எல்லாம் காலை 10 மணி வரை மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக சில இடங்களில் நீர் தேங்கும் அபாயம் இருப்பதாகவும் டிராபிக் நெரிசல் ஏற்படும் ஆபத்தும் இருப்பதால் அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக நேற்றைய தினம் வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "கடந்த 1-12-2023ஆம் தேதி தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (02-12-2023) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று (02-12-2023) காலை 08.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்தது.
இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12-2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாகக் கடக்கக்கூடும்.
காற்று: இதன் காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications