வெடித்து கொட்டப்போகும் மேகம்.. சென்னை +26 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இப்படி இருக்கையில் தற்போது கனமழை தொடங்கியிருக்கிறது. அடுத்த 2 மணி நேரத்தில் 27 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், அதன் பின்னர் பருவமழை தீவிரமடைய தொடங்கியது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர். ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 19% கூடுதலாக மழை பொழிவை பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 323.6 மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 384.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1249.9 மி.மீ, கோவையில் 964.1 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 55.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 122.3 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
நாகையில் பெய்த மழை இயல்பை விட -50 சதவிகிதம் குறைவாகும். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்திருக்கிறது.
இந்நிலையில் இன்று 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications