ஒண்ணு ரெண்டு இல்ல.. 28 மாவட்டங்களில் மழை புரட்டி எடுக்கப்போகுது: வானிலை மையம் கொடுத்த அலர்ட் மெசேஜ்!
சென்னை: அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர உள்ளது. மகாராஷ்டிரா, தெலுங்கானாவிலும் தென்மேற்கு பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் விலகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை விலகியதும், வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். வரும் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 மாவட்டங்களில்: இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications