"இடி மின்னலுடன் விளாசும் மழை.." அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 29 மாவட்டங்களுக்கு பரபர அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மாநிலத்தில் 29 மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த டிசம்பர் மாதம் மிகத் தீவிர கனமழை தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது. முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

அதேபோல டிசம்பர் மாதத்தில் பின்னாட்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது.
கனமழை: அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை எங்கும் இல்லாத ஒரு சூழலே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழை இன்னுமே கூட தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: இந்த கனமழையால் சில இடங்களில் நீர் தேங்கும் என்றும் இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications