ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே? காலை 10 மணி வரை தமிழகத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா?
சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, நேற்று காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திரா) கிழக்கே 280 கி.மீ. கோபால்பூருக்கு (ஒடிஸா) கிழக்கு- தென் கிழக்கே 230 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை/இரவு வாக்கில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஒடிசா) - தீகா (மேற்கு வங்கம்) இடையே கடக்கக் கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications