கனமழை எதிரொலி! மொத்தம் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எதுனு பாருங்க!
நெல்லை: நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. நெல்லை மாநகர் பகுதிகளான சந்திப்பு, டவுன் பேட்டை, பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான மூன்றடைப்பு, நாங்குநேரி, களக்காடு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கால்வாய்கள் எல்லாம் குளம் போல் காட்சித் தருகின்றன. இன்றும் காலை முதலே நெல்லையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அது போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி மாவட்டத்திலும், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், விருதுநகர், நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உயர் வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications