சூறாவளி! இந்த 8 மாவட்டங்களில் இன்று மழை கொட்டப்போகுதாம்.. 4 நாட்களுக்கு உஷார்: வானிலை மையம் அலெர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடும் ஏற்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக, ஜூலை 2, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், 3ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 2) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (3ஆம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கனமழை: நாளை மறுநாள் (4-ம் தேதி), நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

5-ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிக மழை: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 6 செ.மீ., மீ.மாத்தூரில் 5, புவனகிரி, விருத்தாசலம், குப்பநத்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா3, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2, சிதம்பரம், திருத்தணி, நீலகிரி மாவட்டம் மேல்பவானி, கடலூர் மாவட்டம் வடக்குத்து ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சூறாவளிக் காற்று: ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications