சென்னை டூ நெல்லை.. வங்க கரையோர மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்! அடுத்த 2 நாட்கள் மிக கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், டிசம்பர் மாதம் 2,3 தேதிகளில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏறத்தாழ இயல்பான அளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.

தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதான் தற்போது மழைக்கான காரணமாக இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு தினங்களில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
"நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எதிர்பார்த்ததை விட வடகிழக்கு பருவமழை 8 சதவிகிதம் குறைவாக பெய்திருக்கிறது. அதாவது, கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இன்று வரை 320.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் 349.6 மி.மீ மழை பெய்திருக்க வேண்டும்" என்றும் பாலச்சந்திரன் பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications