கொந்தளிக்கும் வங்கக் கடல்! உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
சென்னை: வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே கடந்த 4 ஆம தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலும் தொடங்கியது.

கத்தரி வெயில் தொடங்கிய பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிகவும் லேசான மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தென் மேற்கு பருவமழையும் நேற்று முன் தினம் தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது. இது தெற்கு அந்தமானில் தொடங்கியது. தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சிகளாலும் மழை பெய்து வந்தது.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான நீர் நிலைகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அருவிகளுக்கும் மலை பிரதேசங்களுக்கும் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அது வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மத்திய வங்கக் கடலில் நிலவக் கூடும்.
அதன் பிறகு இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக் கூடும், இதனால் இன்று முதல் 25 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அந்த வகையில் இன்று தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (வியாழக்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24-ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பின்னர், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 25-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்று ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை மையம் அறிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications