வாரிக்கொடுத்த வடகிழக்கு பருவமழை.. வறண்ட வானிலையை விட்டுச்செல்கிறது! தமிழ்நாடு வெதர் அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது முற்றிலுமாக நின்றிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் எங்கும் மழை பதிவாகவில்லை. இந்நிலையில், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு மழை கொடுத்திருப்பதால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான நீர் நிலைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. எனவே விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications