மிதக்கும் மதுரை.. தண்ணீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்! கொட்டி தீர்த்த கனமழையால் தவிக்கும் மக்கள்
மதுரை: மதுரையில் பெய்த கனமழையின் காரணமாக கண்மாய் நிரம்பிய வெளியேறிய தண்ணீர் குடியிருப்புகளுக்குள் நுழைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த வாரம் சென்னையை மழை புரட்டிப்போட்டது. சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

அதேபோல் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த மாவட்டங்களில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக ஓடியது.
மேலும் மதுரையில் நேற்று இரவு சுமார் ஒரு மணிநேரம் விடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதாவது மதுரை மாநகராட்சி செல்லூர் 24, 27வது வார்டுகளில் உள்ள கட்டபொம்மன் நகர், வாஞ்சிநாதன் தெரு, பெரியார் வீதி, போஸ் வீதி, காமராஜர் தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மொத்தம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் செல்லூர் 24, 27 ஆகிய வார்டுகளில் மழைநீர் சூழ்ந்தது. முட்டு அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்தது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் பந்தல்குடி கால்வாய் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காலை முதல் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தேங்கிய மழைநீர் இன்னும் வடியாததால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர்.

அதேபோல் ஆணையூர் உழவர் சந்தையிலும் மழைநீர் புகுந்துள்ளது. அங்குள்ள காய்கறிகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் வடிய தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications