இந்த வாட்டி மொத்தமா மாறிப்போச்சே.. மழையை காணோம்.. வந்தாச்சு வெயில்.. ஆச்சரியத்தில் பெங்களூர்!
பெங்களூர்: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல, சென்னையில் மழை பெய்தால் அல்லது புயல் பக்கத்தில் டிராவல் பண்ணி போனால் கூட, பெங்களூர் குளிரால் நடுங்கும். மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே இருந்த போது சனிக்கிழமை இரவு முதல் பெங்களூர் அப்படித்தான் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மேகமூட்டமாக காணப்பட்ட பெங்களூர் கடும் குளிரை வாரி மக்களுக்கு வழங்கியது.
திங்கள்கிழமை சென்னையில் கடும் மழை பெய்த போது பெங்களூரில் பெரிய மழை இல்லை என்ற போதிலும் கூட சாரல் பெய்த படியும், குளிர் வானிலை நிலவியபடியும் இருந்தது. இதனிடையே மிக்ஜாம் புயல் இன்று காலை முதல் சென்னையிலிருந்து வடக்கே நகர்ந்து ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி சென்றபோது திருப்பதியில் நல்ல மழை பெய்தது. பல பகுதிகளில் மலையில் இருந்து வெள்ளம் பால் போல கொட்டியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

வழக்கமாக சென்னையை தாண்டி புயல் வடக்கே செல்லும்போது, அப்படியே மேற்கு நோக்கி மழை வரும். ஆனால் இன்று பெங்களூரில் மழையின் தாக்கம் கிடையாது. புயல் ஆந்திர கடற்கரைப் பகுதியில் மாலை 4.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. ஆனால் அதற்கு முன்பாக, இன்று மதியம் முதல் பெங்களூர் நகரில் வானம் தெளிவாக காணப்பட்டது. வெயில் அடிக்க ஆரம்பித்தது. சாலையில் மழை தூரலுக்கான எந்த அறிகுறியுமே இல்லை.
இரு நாட்களுக்கு பிறகு சூரியனை பார்த்த மகிழ்ச்சியில் மொட்டை மாடியில் துணி காயப்போடும் பணிகளில் இல்லத்தரசிகள் வேகமாக ஈடுபட்டு வந்தனர். ஏற்கனவே நவம்பர் மாத குளிரால் பெங்களூர் மக்கள் நடுங்கிய நிலையில், புயலின் தாக்கம் இந்த குளிரை அதிகப்படுத்தியிருந்ததால், வெயில் அடிப்பது, பெங்களூர் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications