வங்கக் கடலில் மாற்றம்.. சென்னைக்கு 440 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்.. 10 கி.மீ வேகத்தில் வருகிறது
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை, சென்னைக்கு அருகாமையில் நாளை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாவட்டங்கள்: குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதில் அதிகனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிக கனமழை பெய்யக்கூடிய இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து உள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
வங்கக்கடல்: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 440 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது" என்று இந்திய வானிலை மையம் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications