இனி இப்படித்தான்.. 3 மாதம் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வெப்பம் பதிவு.. பெங்களூரில் தலைகீழ் மாற்றம்!
பெங்களூர்: பெங்களூரில் வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை பெய்கிறது. இதற்கிடையே தான் பெங்களூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நேற்று தான் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதோடு நடப்பு மே மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளதால் இன்னும் வெப்பம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
பொதுவாக பெங்களூர் குளுகுளு சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்றது. இதனால் தான் பல ஐடி கம்பெனிகளின் தேர்வு என்பது பெங்களூராகவே இருக்கிறது. ஆனால் தற்போது பெங்களூரின் காலநிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதத்தில் அதிக குளிர் இருக்கும். ஆனால் இப்போது குளிர் என்பது குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் பெங்களூர் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்க தொடங்கியது.
மேலும் பிப்ரவரி மாதம் முதலே வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிலைமை இனு்னும் மோசமானது. கடும் வெயில் காரணமாக பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த 3 நாட்களாக பெங்களூரில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே தான் பெங்களூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று பதிவாகி உள்ளது. கோடை மழையின் காரணமாக வெயில் குறைந்து நேற்றைய தினம் 31.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுதான் மார்ச் மாதத்தில் இருந்து பதிவான குறைந்தபட்ச வெப்பமாகும். இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி கூறுகையில், ‛‛மழை குறைவால் பெங்களூரில் வெப்பம் அதிகரித்தது.
பெங்களூரில் மார்ச் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பம் என்பது 32.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. ஏப்ரல் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பம் என்பது 34 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் குறைந்தபட்ச வெப்பம் என்பது 31.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. இது கடந்த மார்ச் மாதம் முதல் பெங்களூரில் பதிவான குறைந்தபட்ச வெப்பமாகும்’’ என்றார்.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் சிஎஸ் பட்டீல் கூறுகையில், ‛‛பெங்களூரில் நகரில் பெய்யும் கோடை மழை என்பது வெப்பத்தை தணித்துள்ளது. அடுத்த வாரம் இன்னும் அதிக மழை பெய்யும். இதனால் வெப்பம் இன்னும் தணியும். கடந்த 1ம் தேதி பெங்களூரில் 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் அடுத்த 10 நாட்களில் நிலைமை மாறிப்போய் உள்ளது.
நேற்றைய தினம் 31.9 டிகிரி செல்சியஸ் தான் பதிவானது. பொதுவாக மே மாதத்தில் பெங்களூர் 128.7 மில்லிமீட்டர் மழை பெறும். நடப்பு மே மாதத்தில் இயல்பை விட அதிக மழையை பெங்களூர் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இது நடக்கும் பட்சத்தில் வெப்பநிலை என்பது இன்னும் குறைய வாய்ப்புள்ளது’’ என்றார்.












Click it and Unblock the Notifications